80 வயதானவர்களுக்கு தபால் வாக்கு : திமுக வழக்கு!
தமிழக சட்டமன்ற தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோர் தபாலில் வாக்களிக்க எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
2021 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரியான உமேஷ் சின்கா தலைமையில் 6 பேர் கொண்ட குழு கடந்த 2 நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர். இதன் முடிவில், 80 வயதுக்கு மேற்பட்டோருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் தபால் முறையில் வாக்களிக்க அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் இதுகுறித்து பேசிய உமேஷ் சின்கா, உடல்நலம் குன்றியவர்களை வாக்குச்சாவடிக்கு வரச் சொல்வது சரியாக இருக்காது என்று கூறினார்.
இந்நிலையில் 80 வயதுக்கு மேற்பட்டோர் தபாலில் வாக்களிக்க எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. விரிவுபடுத்தப்பட்ட தபால் வாக்கு முறை திட்டத்துக்கு எதிராக திமுக வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. தபால் வாக்கை வாக்குசாவடி அதிகாரி நேரில் சென்று பெற வேண்டும் என்பதால் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது . அதனால் 80 வயதிற்கு மேலான மூத்த குடிமகன்களுக்கு தனியாக சிறப்பு வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டும் எனவும் திமுக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.