`ஆஞ்சியோகிராம் சிகிச்சை முடிந்தது!’- பொன்.மாணிக்கவேல் எப்படி இருக்கிறார்?

 

`ஆஞ்சியோகிராம் சிகிச்சை முடிந்தது!’- பொன்.மாணிக்கவேல் எப்படி இருக்கிறார்?

நெஞ்சுவலி காரணமாகத் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேல் தற்போது நலமாக இருப்பதாக கூறப்படுகிறது.

`ஆஞ்சியோகிராம் சிகிச்சை முடிந்தது!’- பொன்.மாணிக்கவேல் எப்படி இருக்கிறார்?

சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஐ.ஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல், சிலை கடத்தல் தொடர்பான பல்வேறு வழக்குகளை அதிரடியாக கையாண்டு குற்றவாளிகளை விரைவாக கைது செய்தார். சிலைகளை கடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துவிடுவார். இவரின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன பழைமையான சிலைகளையும் மீட்டதோடு, தஞ்சாவூர் பெரியகோயிலில் இருந்த ராஜராஜன் சோழன் மற்றும் அவரது பட்டத்து இளவரசியான லோகமாதேவி சிலைகளை மீட்டதுதான் ஹைலெட்.

60 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன இந்த சிலைகளை குஜராத் மாநிலம் சாரா பாய் என்ற தனியார் மியூசியத்தில் இருந்து மீட்டு வந்த பொன் மாணிக்க வேலுக்கு பாராட்டுகள் குவிந்தன. இப்படி பல அதிரடிகளை செய்து வந்த பொன் மாணிக்க வேலுக்கு பதவி நீட்டிப்பு கொடுக்க தமிழக அரசு மறுத்துவிட்டது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு அவருக்கு ஒரு வருடம் பணி நீட்டிப்பு செய்து அதிரடியாக உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, சிலை கடத்தல் வழக்கில் மேலும் வேகம் காட்டினார் பொன் மாணிக்கவேல். இந்த நிலையில், சில மாதங்களுக்குமுன் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

`ஆஞ்சியோகிராம் சிகிச்சை முடிந்தது!’- பொன்.மாணிக்கவேல் எப்படி இருக்கிறார்?

காவல்துறையில் அதிரடி, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் இவர்கள் மீது நடவடிக்கை இப்படி தனது பதவி காலத்தில் கலக்கிய பொன் மாணிக்கவேல் ஓய்வுக்கு பின்னர் மதுரை மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான சேடப்பட்டி கிராமத்தில் குடும்பத்தினருடன் தங்கினார். இந்த நிலையில், நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் நண்பர் ஒருவரின் இல்ல திருமணம் நடைபெற்றது. இதில் பொன்.மாணிக்கவேல் கலந்துகொண்டார். பின்னர் திருமணம் முடிந்த பிறகு, மாலை வரை புதுக்கோட்டையிலேயே அவர் இருந்துள்ளார். அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். தற்போது, பொன்.மாணிக்கவேல் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மருத்துவமனையில் பொன்.மாணிக்கவேல் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் சமூக வலைதளத்தில் பரவத் தொடங்கியது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பலரும் உருக்கமாகப் பதிவிட்டு வருகின்றனர். திரும்பி வருவீங்க பொன் மாணிக்கவேல்.