‘இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு!’ – அதிமுக போஸ்டரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

 

‘இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு!’ – அதிமுக போஸ்டரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் ஜெயலலிதா இணைத்து வைப்பது போன்று சென்னையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் ஜெயலலிதா இணைத்து வைப்பது போன்று சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திமுக-வில் இருந்து நீக்கப்பட்டதற்குப் பின் அதிமுக என்ற தனிக்கட்சியை எம்.ஜி.ஆர் தொடங்கிய போது, இன்னும் 50 வருடங்கள் கழித்து தமிழகத்தில் அந்த கட்சி ஆட்சியில் இருக்கும் என கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

அப்படியான சூழலில் கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின், 20 வருடங்கள் அதிமுக-வை துடிப்புடன் வைத்திருந்ததில் ஜெயலலிதாவின் பங்கு அளப்பரியது.

அவர் இருந்த வரை அதிமுகவில் மந்திரிகள் யார்? சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர் என்ன? என்று கூட செய்திகள் வெளி வராத வகையில் அனைத்தும் ஜெயலலிதா என்ற ஒருவரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்ததாகவே அறியப்பட்டது.

jayalalithaa

ஏன் 20 வருடங்களாக ஜெயலலிதாவின் நிழலாக அறியப்பட்ட சசிகலாவின் குரலைக் கூட தமிழக மக்கள் கேட்டதில்லை. ஆனால், பதிவியில் இருந்தபோது 2 முறை ஜெயலலிதா சிறை செல்ல நேரிட்டது. அப்போது மட்டும் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக செயல்பட்டார்.

ஜெயலலிதா மறைவிற்குப் பின் மூன்றாவது முறையாக முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்ட ஓ.பன்னீர்செல்வத்தின் பதவிக்காலம் இரண்டு மாதங்கள் நீடித்தது. அதன்பின் ஏற்பட்ட பிளவுகளினால் அதிமுக அணிகளாக பிரியத் தொடங்கியது.

ஆட்சி அதிகாரம் எடப்பாடி பழனிசாமி கைகளிலும், மக்கள் செல்வாக்கு ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இருப்பது போன்ற ஒரு சூழல் உருவாகியிருந்த நிலையில், இருவரையும் அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சேர்த்து வைத்தார்.

eps ops

அப்போது எடுக்கப்பட்டிருந்த புகைப்படத்தில் ஆளுநரை நீக்கிவிட்டு, ஜெயலலிதா புகைப்படத்துடன் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படத்தை வைத்து போஸ்டர்கள் அடித்து சென்னை முழுவதும் அதிமுகவினர் ஒட்டியுள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியதையடுத்து, “ஜெயலலிதா இருந்தவரை நிமிர்ந்து பார்த்து கூட பேசாத அமைச்சர்களை அவர் கைபிடித்து சேர்த்து வைப்பதா? இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு” என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.