ஹைட்ரோ கார்பன், மீத்தேன் பிரச்னைகளுக்கு ரஜினி குரல் கொடுத்தாரா? வேல்முருகன் பாய்ச்சல்

 

ஹைட்ரோ கார்பன், மீத்தேன் பிரச்னைகளுக்கு ரஜினி குரல் கொடுத்தாரா? வேல்முருகன் பாய்ச்சல்

ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட தமிழகத்தின் பல பிரச்சனைக்கு ரஜினி செவிசாய்க்கவில்லை என தவாக தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை: ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட தமிழகத்தின் பல பிரச்சனைக்கு ரஜினி செவிசாய்க்கவில்லை என தவாக தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி, முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை யார்? என கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக தன் போயஸ் கார்டன் இல்லம் முன்பு செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் பற்றி எனக்கு தெரியாது என்பது போன்ற மாயை சிலர் உருவாக்கி வருவதாகவும், கேள்வியை தெளிவாக கேட்டிருந்தால் பதிலளித்திருப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கடலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், “ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை குழந்தைகளுக்கு கூட தெரியும். ஆனால் ரஜினிகாந்திற்கு அந்த ஏழு பேர் யார் என்பது தெரியவில்லையா? அவர்களை தெரியாதது போல் ரஜினி நடிக்கிறார்.

ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட தமிழகத்தின் பல பிரச்சனைக்கு ரஜினி செவிசாய்க்கவில்லை. பச்சை தமிழன் என்று பேசிவிட்டு தமிழகத்துக்கு என்ன செய்ய போகிறார் ரஜினி?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.