விடுதலைப் புலிகள் மீதான தடையை நீதிமன்றம் மூலமாக நிச்சயம் உடைப்பேன்: வைகோ உறுதி!
விடுதலைப் புலிகள் மீதான தடையை உச்சநீதிமன்றம் சென்றேனும் உடைப்பேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை : விடுதலைப் புலிகள் மீதான தடையை உச்சநீதிமன்றம் சென்றேனும் உடைப்பேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தடை நீட்டிக்கப்பட்டது தொடர்பாகச் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி வருகிறது. முதற்கட்டமாகக் கடந்த 26ம் தேதி டெல்லியில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து இரண்டாவதாக நீதிபதி சங்கீதா திங்கரா சேகல் அமர்வில் சென்னை சேப்பாக்கம் அரசினர் புதிய விருந்தினர் மாளிகையில் இன்று நடைபெற்றது.அதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆஜராகி தனது வாதத்தை முன்வைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘இந்த வழக்கின் இறுதியில் எனக்குப் பேச வாய்ப்பளிக்கப்பட்டது. வரும் 11முதல் 15 வரை இந்த வழக்கானது மதுரையில் நடைபெறும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். இந்த வழக்கை உச்சநீதிமன்றம் சென்றேனும் உடைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’ என்றார்.
தொடர்ந்து காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசிய அவர், காஷ்மீர் விவகாரத்தில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு விட்டது. வரும் செப். 15-ல் மதிமுக மாநாட்டில் பரூக் அப்துல்லா கலந்து கொள்கிறார். ஆனால் அவரை தொடர்பு கொள்ளமுடியவில்லை. இருப்பினும் அவர் நிச்சயம் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன்’ என்றார்.