தினகரனை கண்டு பயந்தே தேர்தல் ரத்தானது: அமமுக வேட்பாளர் காமராஜ் கருத்து!
டிடிவி தினகரனுக்கு பயந்து திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் சேர்ந்து தேர்தலை ரத்து செய்துவிட்டதாக அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர்: டிடிவி தினகரனுக்கு பயந்து திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் சேர்ந்து தேர்தலை ரத்து செய்துவிட்டதாக அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் தொகுதிக்கு நடைபெறவிருந்த இடைத்தேர்தலை ரத்து செய்ததாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ், ‘அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும், டெபாசிட் பறிபோகும் அளவிற்கு அங்கு நிலைமை இருக்கிறது. இன்றைக்குத் திமுக இந்த தேர்தலை எதிர்க்கிறது. அதிமுக எதிர்க்கிறது. இரண்டு கட்சிகளும் டிடிவி தினகரனை பார்த்துப் பயப்படுகின்றனர். அதுதான் தேர்தலை ஒத்திவைப்பதற்குக் காரணம் என நாங்கள் எண்ணுகிறோம். இதே தேர்தல் ஆணையம் முன்னதாக தேர்தல் நடத்தலாம் என அறிவித்தது. அதன் பிறகு தான் நாங்கள் வேட்பாளரை அறிவித்துள்ளோம். கஜா புயல் பாதித்த உடன் திருவாரூர் மாவட்ட மக்களுக்கு டிடிவி தினகரன் ஆறுதல் கூறி உதவிகளைச் செய்துள்ளார். மக்கள் தேர்தல் வேண்டாம் என விரும்பவில்லை. இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் தான் தேர்தல் வேண்டாம் என விரும்புகின்றனர்’ என்றார்.
சில அரசியல் கட்சிகள் கஜா புயல் நிவாரணப்பணிகள் நடப்பதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தன. இதனிடையே, திமுக, அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துத் தேர்தல் பணிகளைத் தொடங்கியது. இந்நிலையில் திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான அனைத்துப் பணிகளையும் நிறுத்தி வைக்குமாறு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.