கோட்டா குழந்தைகள் இறப்பு…. முந்தைய பா.ஜ.க. அரசை குறை கூறுவதில் அர்த்தமில்லை… காங்கிரஸ் துணை முதல்வர் சச்சின் பைலட்
கோட்டா மருத்துவமனை குழந்தைகள் இறப்பு விவகாரத்தில் நாம பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது. முந்தைய பா.ஜ.க. அரசை குறை கூறுவதில் அர்த்தமில்லை என சொந்த கட்சி ஆட்சி மீதே விமர்சனம் செய்துள்ளார் ராஜஸ்தான் மாநிலத்தின் துணை முதல்வர் சச்சின் பைலட்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மிகப்பெரிய மாவட்ட அரசு மருத்துவமனையான ஜே.கே. லோன் என்ற தாய் மற்றும் சேய் நல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் முதல் அந்த மருத்துவமனையில் திடீர் திடீரென பச்சிளம் குழந்தைகள் இறந்து வருகின்றன. மருத்துவமனையின் சுகாதரமற்ற நிலமையை இதற்கு காரணம் என குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி, கடந்த 33 நாட்களில் அந்த மருத்துவமனையில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 104ஆக உயர்ந்துள்ளது.
கோட்டா மருத்துவமனை குழந்தைகள் இறப்பு குறித்து அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், முந்தைய பா.ஜ.க. அரசை காட்டிலும் எங்களது ஆட்சியில் குழந்தைகள் இறப்பு குறைந்துள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், ராஜஸ்தான் துணை முதல்வரும், அம்மாநிலத்தின் காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட் நேற்று கோட்டா மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இதற்கு( கோட்டா குழந்தைகளின் இறப்பு) எங்கள் பதில் மிகவும் இரக்கமுள்ளதாகவும் உணர்திறன் மிக்கதாகவும் இருந்திருக்கலாம் என நினைக்கிறேன்.
ஆட்சிக்கு வந்து 13 மாதங்கள் கடந்த பிறகு முந்தைய பா.ஜ.க. அரசை குறை கூறுவதில் எந்தவித அர்த்தமும் இல்லை. பொறுப்புடைமை சரி செய்யப்பட வேண்டும். எண்ணிக்கை கூறி ஒருவரும் பொறுப்புடைமையிலிருந்து தப்பிக்க முடியாது. கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது நாம் பேசக் கூடாது. தற்போது என்ன நடக்கிறது என்பதற்கான பொறுப்பை நாங்கள் சரிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். முதல் முறையாக காங்கிரஸ் தலைவர் தங்களது சொந்த ஆட்சியை விமர்சனம் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.