காலியாகும் டிடிவியின் கோட்டை: தங்க தமிழ்ச்செல்வனை தொடர்ந்து வீழ்ந்தது அடுத்த விக்கெட்!
மக்களவைத் தேர்தலில் அமமுக சார்பில் தென்சென்னை வேட்பாளராகப் போட்டியிட்டவர் இசச்கி சுப்பையா. இவர் தற்போது அமமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
சென்னை: மக்களவைத் தேர்தலில் அமமுக சார்பில் தென்சென்னை வேட்பாளராகப் போட்டியிட்டவர் இசச்கி சுப்பையா. இவர் தற்போது அமமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதிமுகவிலிருந்து விலகி அமமுக என்ற கட்சியை தொடங்கிய தினகரனுக்கு ஆரம்பம் என்னமோ அமர்க்களமாக இருந்தாலும், சில காலமாகச் சரிவை மட்டுமே சந்தித்து வருகிறார் தினகரன். அந்த வகையில் அமமுகவில் உள்ள இசக்கி சுப்பையா ஜூலை 6-ஆம் தேதி முதல்வர் முன்னிலையில் 20,000 பேருடன் அதிமுகவில் இணைவதாகத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து நெல்லையில் பேட்டியளித்துள்ள அவர், ‘தொண்டர்களின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார். நான் 48 நாட்கள் மட்டுமே அமைச்சராக இருந்தவன் என்று என்னை தினகரன் கிண்டல் செய்கிறார். இது தலைமை பொறுப்பில் உள்ளவருக்கு அழகல்ல. நானும் என்னை சேர்ந்தவர்களும் மீண்டும் தாய் கழகத்திற்கே செல்கிறோம். என்னால்தான் இசக்கி சுப்பையா அடையாளம் காட்டப்பட்டார் என்று டிடிவி தினகரன் சொல்கிறார். ஆனால் தினகரனே தொண்டர்களால் அடையாளம் காணப்பட்டவர்தான்’ என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ‘இசக்கி சுப்பையா பாதாள சாக்கடை ஒப்பந்தக்காரர். தமிழக அரசிடமிருந்து 70கோடி பாக்கி உள்ளது. எஸ்.பி.வேலுமணி தொல்லை தாங்க முடியாமல் கட்சியில் போய் சேர்ந்திருப்பார்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.
ஏற்கனவே அமமுகவிலிருந்து செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், கலைராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விலக்கியதையடுத்து தற்போது இசக்கி சுப்பையாவும் விலகியிருப்பது எதிர்காலத்தில் அமமுக மட்டுமல்ல தினகரனின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாகியுள்ளது.