20 நிமிடங்களுக்கு மேல் நீடித்த சந்திப்பு: பிரதமருடன் என்ன பேசினார் உதயநிதி?
பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசி உள்ளார் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். 20 நிமிடங்களுக்கு மேல் நீடித்த இந்த சந்திப்பில் முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டது என்று கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை , சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் அரசு முறை பயணமாக டெல்லிக்கு சென்று இருக்கிறார் . இரண்டாம் நாளான இன்று அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசி உள்ளார். மாலை நாலு முப்பது மணிக்கு டெல்லியில் பிரதமர் இல்லத்தில் அவரை சந்தித்து பேசி உள்ளார்.
இந்த சந்திப்பு 20 நிமிடங்களுக்கு மேலாக நடந்திருக்கிறது. பிரதமருடன் நடந்த சந்திப்பில் என்ன பேசினார் என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்து செய்தியாளர்களிடம் கூறி இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் .
பிரதமரை இன்று டெல்லியில் சந்தித்து கலந்துரையாடினோம். அவரின் தாயார் மறைவுக்கு ஆறுதலை தெரிவித்தேன். முதலமைச்சர் ஸ்டாலின் நலன் குறித்து விசாரித்தார். தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையில் எடுக்கப்படும் முன்னெடுப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த சந்திப்பின்போது, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பது, தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம். பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அடுத்த முறை கேலோ இந்திய விளையாட்டை தமிழகத்தில் நடத்துவதற்கு பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். மத்திய அரசின் துறைகளில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தேன். நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தேன். இவற்றை பிரதமர் கேட்டுக் கொண்டார் எனக் கூறியுள்ளார் உதயநிதி.
அமைச்சர் உதயநிதி மேலும், எஸ்.ஏ. அமைப்பின் கிளையை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, தமிழகத்தில் மாவட்டம் தோறும் விளையாட்டு மைதானம் அமைக்கும் திட்டம் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தேன். பிரதமர் தமிழ்நாட்டில் விளையாட்டு துறை குறித்து கேட்டறிந்தார். மாவட்டம் தோறும் விளையாட்டு மைதானம் அமைக்க இருப்பது குறித்தும், அதற்கு நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது குறித்தும் பிரதமரிடம் வலியுறுத்தினேன் என்று கூறியுள்ளார்.