"வாழ தகுதியற்ற வடசென்னை... மாபெரும் அநீதி" - அரசின் மீது பாய்ந்த வேல்முருகன்!
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2016ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தின்படி, 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைக் கடந்துவிட்டால், பருவநிலைப் பேரழிவு எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாது என்பதுதான் சுற்றுச்சூழல் நிபுணர்களின் கருத்து. உலக நாடுகளின் அரசுகளும், லாபம் கொழிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களும் காது கொடுத்துக் கேட்காமல் இருந்தாலும் கூட, பருவநிலை குறித்தும், அடுத்த தலைமுறை குறித்தும் நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தலையாய கடமை நமக்கு உள்ளது.
அனல் மற்றும் அணுமின் நிலையங்களுக்கு மாற்றாக, சூரிய மின் உற்பத்தி, காற்றாலை மின் உற்பத்தி போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மின் உற்பத்தி நிலையங்களை அதிகப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம். இச்சூழலில், எண்ணூர் பகுதியில் மேலும் புதிதாக அனல் மின் நிலையம் அமைக்க தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக புதிய சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளது. இதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஜனவரி 6 நடைபெறும் என மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.
ஏற்கெனவே சூழலைப் பாதிக்கும் 38 தொழிற்சாலைகள் எண்ணூர் மணலி பகுதியில் அமைந்துள்ளன. அப்பகுதி மக்கள் பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், வாழத் தகுதியற்ற இடமாக வடசென்னை மாறிவருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். ஆனால் அப்பகுதியில் மீண்டும் புதிதாக அனல் மின் நிலையம் கட்டுவது, சுற்றுச்சூழலுக்கும், வடசென்னை மக்களுக்கும் செய்யும் மாபெரும் அநீதியாகும். மும்பை, டெல்லி, பெங்களூருவை விட சென்னையில்தான் காற்று மாசினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளன என சமீபத்தில் வெளியான C40 ஆய்வறிக்கையைச் சுட்டிக்காட்டி பூவுலகின் நண்பர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதோடு திருவொற்றியூர், காசிமேடு, குருவிமேடு, மீஞ்சூர், ஊரணம்மேடு, சேப்பாக்கம், அத்திப்பட்டு, காட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளில் PM 2.5 நுண் துகளின் அளவுகள் உலக சுகாதார நிறுவனம் பாதுகாப்பான அளவுகளாக நிர்ணயித்துள்ள அளவுகளை விட, நான்கு முதல் எட்டு மடங்கு அதிகமாகப் பதிவாகியுள்ளதாக ஹெல்த் எனர்ஜி இனிசியேட்டிவ் ஆய்வறிக்கையின் வாயிலாகத் தெரியவருகிறது. எனவே, எண்ணூர் பகுதியில் ஏற்கெனவே அனல் மின் நிலையங்கள் இயங்கி வரும் நிலையில், அப்பகுதியில் மேலும் புதிதாக அனல் மின் நிலையம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்'' என குறிப்பிடப்பட்டுள்ளது.