’இதைத்தான் நான் அப்போவே சொன்னேன்.. இனியாவது நீட் பயிற்சி மையத்தை தொடங்குங்க..’ - வானதி சீனிவாசன்..

 
வானதி

தமிழகத்திற்கு இப்போதைக்கு நீட் விலக்கு மசோதா அவசியம் இல்லை என்றும்,  ஆளுநரின் முடிவை ஏற்று, நீட் தேர்வு பயிற்சி மையங்களை தமிழக அரசு உடனே தொடங்க வேண்டும் எனவும் பாஜக மகளிரணி தேசிய தலைவரும்,  எம்.எல்.ஏவுமான  வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக   அவர் வெளியிட்ட அறிக்கையில், ”நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்த விலக்கு அளிப்பதற்கான, தமிழக அரசின் சட்டத்தை, ஆளுநர் திருப்பி அனுப்பியிருக்கிறார். நீர் தேர்வால் சமூக நீதிக்கு  எந்த பாதிப்பும் இல்லை  என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பையும், நீட் விலக்கு சட்டம் தமிழகத்தில் உள்ள கிராமப்புற , ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்பதையும் ஆளுநர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

நீட் தேர்வு

ஆளுநரின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. நீட் தேர்வு என்பதே, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால், திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அரசியல்வாதிகள் , பெரு முதலாளிகளால் நடத்தப்படும் தனியார் மருத்துவமனைகளின் நன்கொடை  மற்ரும் கட்டணக்  கொள்கைக்கு  முடிவு கட்டவும், மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் நீட் தேர்வு அவசியமாகும்.  அதனால்தான், அதிகமான தனியார் மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட  தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு வருகிறது.

நீட்  தேர்வால் கிராமப்புற மாணவர்களும், ஏழைகளும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்குமாறு, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கினார்.

நீட் விலக்கு

அதன்படி, மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முந்தைய அதிமுக அரசு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது. இதனாலும், மத்திய பாஜக அரசு, ஒரே ஆண்டில் தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரிகளை அளித்ததாலும், மருத்துவப் படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 20, 30 லிருந்து  500, 600-ஆக மாறியுள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான  மாணவர் சேர்க்கையில் தமிழகத்தில் நடைமுறையில் 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. 7.5 % இட ஒதுக்கீடும்  இருக்கிறது.  

“டாஸ்மாக் அருகிலேயே தடுப்பூசி முகாம் நடத்துங்க” – வானதி சீனிவாசனின் ஸ்பெஷல் ஐடியா!

எனவே நீட் தேர்வால் சமூக நீதிக்கு எந்த பாதிப்பும் இல்லை. கிராமப்புற ஏழை மாணவர்களுக்கும் பாதிப்பு இல்லை. நீட் தேர்வால்  உண்மையில் பாதிக்கப்பட்டிருப்பது தனியார் கல்லூரிகளும், தனியார் பள்ளிகளும் தான்.  சட்டமன்றத்தில்  நீட் விலக்கு சட்டம் கொண்டு வரப்பட்ட போதே, அதனை பாஜக சார்பில் எதிர்த்தேன். தேவையில்லை என்று வாதிட்டோம்.  இதுதொடர்பாக தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்திலும் வலியுறுத்தினோம்.   

எனவே, நீட் தேர்வில் அதிகமான தமிழக மாணவர்கள், தமிழ் வழி மாணவர்கள், கிராமப்புற, ஏழை மாணவர்கள் வெற்றிபெற தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை உடனடியாக தமிழக அரசு தொடங்க வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.