"எனக்கு அந்த ஆசையே இல்லை; கோவை மக்களுக்கு குசும்பு" - உதயநிதி ஓபன் டாக்!
உதயநிதி அரசியலுக்குள் வருவாரா மாட்டாரா என இங்கே அனைவரும் விவாதம் எழுந்த வேளையிலேயே அவர் எம்எல்ஏவாக சட்டப்பேரவைக்குள் நுழைந்துவிட்டார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் அமைச்சர் பட்டியல் குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகின. அதில் உதயநிதியின் பெயரும் அடிபட்டது. அவருக்கு உள்ளாட்சி துறை ஒதுக்கப்படலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கூ அதில் விருப்பம் இல்லை என்றே தெரிகிறது. இதனால் அமைச்சரவையில் உதயநிதிக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை.
அவர் எம்எல்ஏவாகவே தொடர்ந்தார். இச்சூழலில் அவரை அமைச்சராக்க வேண்டும் என கட்சிக்குள் ஆதரவு குரல்கள் அதிகரித்துள்ளன. அதனை தொடங்கிவைத்தது உதயநிதியின் நண்பரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உதயநிதி அமைச்சராக வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்றார். அவரை தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில் பாலாஜி, சா.மு. நாசர் உள்ளிட்டோரும் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி என பல்வேறு கட்சி பிரமுகர்கள் உதயநிதியை அமைச்சராகவோ அல்லது துணை முதலமைச்சராக்கவோ வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆனால் அமைச்சராகும் எண்ணமே தனக்கு இல்லை என உதயநிதியே முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கோவையில் திமுக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர், "அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதிலும் துணை முதல்வர் வரை என்னை கொண்டு போய்விட்டார்கள். தினமும் பத்திரிகைகளில் இதுகுறித்துதான் எழுதி வருகிறார்கள். அமைச்சர் பதவி போன்ற எந்த பொறுப்பிற்கும் எனக்கு ஆசை இல்லை.
மக்கள் பணியில் என்றும் உங்களுள் ஒருவராக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். முதலமைச்சருக்கும் மக்களுக்கும் ஒரு பாலமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்றார். மேலும் பேசிய அவர், "கோவை மக்களுக்கு குசும்பு மட்டும் இல்லை. சில நேரங்களில் ஏமாற்றியும் விடுகிறீர்கள். இதே கோயம்புத்தூருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்து இரு நாட்கள் தங்கியிருந்து இந்த மாவட்ட முழுவதும் பிரச்சாரம் செய்தேன். எப்படியும் 5 தொகுதியில் ஜெயித்துவிடுவோம் என நினைத்தேன். ஆனால் 10 தொகுதியில் ஒரு தொகுதி கூட ஜெயிக்கவில்லை.
தமிழ்நாடு முழுக்க ஜெயித்தோம். கோவை மக்களாகிய நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிறது, நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. மாவட்டச் செயலாளர்களின் ஒத்துழைப்போடு திமுக தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். செந்தில்பாலாஜியிடம் ஒரு வேலையைக் கொடுத்துவிட்டால் அவர் முடிக்காமல் விட்டுவிட மாட்டார். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இருந்தாலும் கோவை மக்கள் திமுகவை ஏமாற்றிவிடாதீர்கள்” என்றார்.