"எந்த ஆய்வும் செய்யல" - டிஆர் பாலு எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் அசால்ட் பதில்!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தொடங்கியது. இதில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வியெழுப்பி வருகின்றனர். அந்த வகையில் மக்களவையில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர் பாலு நீட் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகள் குறித்து கேள்வியெழுப்பினார். "பல்வேறு போட்டித் தேர்வுகள் காரணமாக சமுதாயம் மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோர் நலன் எவ்வகையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்பதை கண்டறிய அரசு ஆய்வு மேற்கொண்டுள்ளதா?
அப்படியானால் அதன் விவரம் என்ன?, அத்தகைய ஆய்வேதும் மேற்கொள்ளப்படவில்லை என்றால் அதற்கான காரணங்கள் என்ன?, அனைத்திந்திய அளவிலான பொது நுழைவுத் போட்டித் தேர்வுகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பாதிக்கப்படாமலும் அவர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்திடவும் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?" என்று கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய அரசின் சமூகநீதி துறை இணையமைச்சர் பிரதிமா பௌமிக், "நீட் உள்ளிட்ட அனைத்திந்திய போட்டித் தேர்வுகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வுகள் எதையும் மேற்கொள்ளவில்லை. எனினும் நீட் தேர்வில் சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீட் தேர்வு ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்யப்படவில்லை” என்றார்.