மணமக்களுக்கு தக்காளி பரிசளித்த விஜய் மக்கள் இயக்கத்தினர்...

 
தக்காளி பரிசு

வடகிழக்கு பருவமழை காரணமாக தக்காளி வரத்து வெகுவாக பாதிக்கப்பட்டு விலை கடுமையாக உயர்ந்தது. கோயம்பேடு காய்கறி சந்தையில்  கடந்த 4 நாட்களாக 1 கிலோ தக்காளி 140 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் 50 ரூபாய் குறைந்து நேற்று ரூபாய் 90 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தக்காளி விலை 50 ரூபாய்க்கும் கீழ் குறைந்துள்ளது.

ஆனால் கடந்த சில நாட்களாக இருந்த தக்காளியின் விலை அனைவரையும் கதிகலங்க செய்துவிட்டது. அந்தச் சூழலில்தான் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி ஒருவரின் திருமணத்தில் தக்காளி பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. கோவையைச் சேர்ந்த மகேஸ்வரன் ஸ்ருதி தம்பதிக்கு தனியார் மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மகேஸ்வரன் கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணி துணைத்தலைவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மணமகனின் நண்பர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மணமக்களுக்கு தலா 2 கிலோ தக்காளியை பரிசளித்தனர் . தற்போதைய சூழலில் தக்காளிதான் காஸ்ட்லி என்பதால் அதை வழங்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.