எடப்பாடி பற்றி அவதூறு பேச்சு- தப்பினார் ஈவிகேஸ் இளங்கோவன்

 
e

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.  இந்த நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அந்த அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். 

e

 கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி அன்று திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பற்றி அவதூறாக பேசியதாக தமிழக அரசு சார்பில் திருச்சி மாவட்ட அரசு வழக்கறிஞர்,  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

 திருச்சி மாவட்ட அரசு வழக்கறிஞர் தொடர்ந்து இந்த அவதூறு வழக்கினை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை மாதத்தில் ஏழாம் தேதி அன்று வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. இதன் பின்னர் திருச்சியில் தொடரப்பட்டு நிலுவையில் இருந்த அந்த வழக்கு திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி கே . பாபு முன்பு விசாரணைக்கு வந்தது.   அப்போது அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஹேமந்த் ஆஜராகி வாதாடினார்.  அதன் பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி கே. பாபு உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது தொடரப்பட்ட மேற்படி அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.