"ராணுவத்தின் பச்சை படுகொலை; அதிகார திமிர்" - பிரதமர் மீது சீறிய சீமான்!
நாகலாந்திலுள்ள மோன் மாவட்டத்தில் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் என நினைத்து பொதுமக்கள் 13 பேரை அசாம் ரைபிள்ஸ் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இச்சம்பவம் தேசியளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ராணுவத்திற்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. அந்த வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் மிகவும் ஆக்ரோஷமாக கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அப்பாவி பழங்குடி மக்கள் 13 பேர் ராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சி தருகிறது.
நாடு முழுவதும் பெரும் கொதிநிலையை உருவாக்கியிருக்கும் இச்சம்பவத்தின் மூலம் மக்களின் பாதுகாப்பும் மக்களாட்சியும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. இது மக்களுக்கான நாடா? மக்களைக் கொன்றொழிக்கும் சுடுகாடா? என உள்ளச் சீற்றம் ஏற்படுகிறது. பழங்குடியினரைப் படுகொலை செய்துவிட்டு, பயங்கரவாதிகள் என நினைத்துத் தவறுதலாகச் சுட்டுக் கொன்றுவிட்டோம் எனக் காரணம் கற்பிக்க முயலும் ராணுவத்தினரின் செயல் மிக இழிவானது. அந்நிய ஆக்கிரமிப்புகளில் இருந்தும் இயற்கைச் சீற்றங்களில் இருந்தும் சொந்த மக்களைக் காப்பாற்ற உருவாக்கப்பட்டது ராணுவம்.
ஆனால் இம்மண்ணின் ஆதி தொல்குடிகளையே காக்கை குருவியைப் போல சுட்டுக்கொலை செய்தது கடும் கண்டனத்துக்குரியது. எதன் பொருட்டும் இதுபோன்ற பச்சைப் படுகொலைகளை அரசப் பயங்கரவாத செயல்களை ஒருநாளும் ஏற்க முடியாது. சொந்த நாட்டு மக்கள் மீதே ராணுவத்தினரால் ஏவப்பட்ட இத்தகைய அரச வன்முறையை பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாக எதிர்க்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலோ, கொலை செய்த ராணுவ வீரர்களுக்குக் கண்டனமோ பதிவு செய்யாது பிரதமர் மோடி அமைதி காப்பது வெட்கக் கேடானது.
பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கையும் அதிகாரத் திமிரில் செய்யும் அநீதிகளையும் அட்டூழியங்களையும் நாட்டு மக்கள் நீண்டகாலம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். இவற்றுக்கான எதிர்வினையை, பதிலடியைக் கட்டாயம் சனநாயக முறையிலேயே திருப்பித் தருவார்கள் என அறுதியிட்டுக் கூறுகிறேன். கொன்றொழித்த ராணுவ வீரர்களைக் கொலை வழக்கின் கீழ் கைது செய்ய வேண்டும். கொலையுண்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.