"என்னாச்சு சீமானுக்கு... சத்தத்தையே காணோமே" - அறிக்கை மட்டும் தான் வருது!
நாம் தமிழர் கட்சி தேர்தல்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் சமூக வலைதளங்களில் எப்போதும் பேசுபொருளாக இருக்கும். அதற்குக் காரணம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான். சீமான் எதையாவது விளையாட்டு போக்கில் கூற அது இணையத்தில் வைரலாகி வரும். இதனால் எப்போதும் அரசியல் லைம்லைட்டிலேயே இருப்பார். அவருடைய பேட்டிக்கென தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. அப்படியிருக்கையில் கடந்த இரு வாரங்களாக தமிழ்நாடு அரசியலே அந்தலை சிந்தலையாகிக் கிடக்கும் சூழலில் சீமான் எதை பற்றியும் பேசவில்லை.
தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு, பொங்கல் பரிசுத்தொகுப்பு, அரியலூர் மாணவி தற்கொலை என பலபல அரசியல் நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்க சைலண்ட் மோடிலேயே இருக்கிறார் சீமான். நடிகை விஜயலட்சுமி வழக்கு மீண்டும் தூசு தட்டப்பட்டுள்ளதால் அதில் அவர் பிஸியாக இருப்பதாக சொல்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள். இருப்பினும் அவ்வப்போது அறிக்கை வாயிலாக கோரிக்கைகளை முன்வைக்கிறார். இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பள்ளிக்கரணை சதுப்பு நில காடுகள் குறித்து பேசியிருக்கிறார். அதில் அரசு அதிகாரிகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், "பள்ளிக்கரணை சதுப்பு நில ஆக்கிரமிப்புகளை அகற்றாது, அந்நிலத்தை சிதைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காது அலட்சியப்போக்கினை வெளிப்படுத்தும் தமிழக அரசின் செயல் பெரும் ஏமாற்றமளிக்கிறது. நீராதாரத்தைத் தேக்கி வைப்பதில் பெரும்பங்காற்றும் சதுப்பு நிலங்களை ஆக்கிரமிப்புக்குள்ளாக்கி வருவதும், அதனை ஆளும் வர்க்கம் தடுக்கத் தவறுவதும் கடும் கண்டனத்திற்குரியது. சென்னையின் சுற்றுச்சூழல் அமைப்புகளில் பள்ளிக்கரணை சதுப்புநிலம் மிக முக்கியமான ஒன்றாகும்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் நடந்தேறிய ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, அதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீது, தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!https://t.co/kKSXiLSmnR@CMOTamilnadu @mkstalin pic.twitter.com/lYRZ5E0bFZ
— சீமான் (@SeemanOfficial) January 30, 2022
5,000 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலமானது தொடர் ஆக்கிரமிப்புகளின் காரணமாக தற்போது வெறும் 500 ஹெக்டேராக சுருங்கிக் காணப்படுகிறது. இச்சதுப்பு நிலமானது கடலுக்கு அருகில் இருப்பதால் கடல் நீரையும், கடல் பொங்கி வரும் நேரத்தில் உள்வரும் நீரையும் நிலத்தின் அடியில் தேக்கி வைக்கும் தன்மை கொண்டது. மேலும், இது ஒரு சிறந்த நன்னீர் வடிகட்டியாகவும் திகழ்கிறது. மிகுந்த சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இவ்வமைப்பானது கட்டிட ஆக்கிரமிப்புகளாலும், குப்பைகளாலும் அரசின் கவனக்குறைவாலும் அலட்சியப்போக்கினாலும் சீரழிந்து வருகிறது.
அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல், மாறாக அவர்களுக்குப பதவி உயர்வும் முக்கியமான பொறுப்புகளும் கொடுக்கப்படுவது ஜனநாயக துரோகமாகும். சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மீட்டுருவாக்குவதில் முதன்மை கவனமெடுத்து, ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்புகளை மீட்டெடுத்து, இனி எந்தவித ஆக்கிரமிப்பும் நடைபெறாதவாறு தடுக்க வேண்டுமெனவும், இதுவரை நடைபெற்ற மோசடிகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என கூறப்பட்டுள்ளது.