"ஆளுநர் மீட்டிங்; திமுக தீடீர் மாற்றம்.. பாஜக கூட்டணிக்கு அச்சாரம்" - பகீர் கிளப்பும் சீமான்!
20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுவிக்க வேண்டும் என்றும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையிலிருந்து எழுவரை விடுதலை செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழங்கினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த அதிமுக ஆட்சியில் அண்ணா பிறந்தநாளையொட்டி, சிறையில் இருப்பவர்கள் விடுதலை செய்ததில் ஒரு இஸ்லாமியர்கள் கூட இல்லை.
அதிமுகவும் திமுகவும் இஸ்லாமியர்கலை வாக்கு அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர். எதிர்க்கட்சியாக இருந்தபோது குரல் கொடுத்த திமுக ஆட்சிக்கு வந்த பின் கண்டு கொள்ளவில்லை. எனவே 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுவிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலையில் இருக்கும் 7 பேரை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மத்திய அரசை எதிர்ப்பதாக கூறும் திமுக அரசு, ஆளுநர் சந்திப்புக்கு பிறகு புதிய கல்விக் கொள்கையில் நல்ல விஷயம் இருக்கிறது. வீடு தேடி கல்வி திட்டம் என பல விஷயம் ஆதரவு கொடுக்கிறது. எதிர்காலத்தில் கூட்டணிக்கான இணைப்பு திட்டமோ என சந்தேகம் வரும் அளவிற்கு அவர்கள் செயல்பாடுகள் இருக்கிறது. இதை தான் முன்பே நான் குறிப்பிட்டேன். திமுகவும் பாஜகவும் வேறு வேறு இல்லை” என்றார்.