பாஜக அல்லாத மாநிலங்களில் உளவு பார்க்கவே ஆளுநர்கள் நியமிக்கப்படுகின்றனர்- சீமான்

 
seeman

ரங்கசாமி காங்கிரஸ் முதலமைச்சராக இருந்தபோதே, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றிருக்க வேண்டும். ரங்கசாமிக்கு கொள்கையோ, கோட்பாடோ இல்லை. அவருக்கு எது சரியோ, அதை செய்கிறார் என நாம் தமிழர் கட்சி சீமான் புதுச்சேரியில் பேட்டி அளித்தார்.

Governors in the past did not interfere in State politics: Seeman


புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என முதலில் வலியுறுத்தியது நாம் தமிழர் கட்சிதான். நீண்டகாலமாக அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் செய்திருக்க வேண்டும். நமது உரிமை மாகே, ஏனாம் வேண்டாம், மாநில உரிமைதான் வேண்டும். புதுவையின் பெரிய துறைகளை மாகே, ஏனாமை சேர்ந்தவர்கள் எடுத்து கொள்கின்றனர். புதுவை மாநில அந்தஸ்துக்காக தொடர்ந்து போராடுவோம். ரங்கசாமி காங்கிரஸ் முதலமைச்சராக இருந்தபோதே கேட்டிருக்க வேண்டும். உலகில் தனி மனித சிந்தனையிலிருந்து கிளம்பியதுதான் புரட்சி. ரங்கசாமி கூட்டணி ஆட்சிதான் மத்தியில் உள்ளது. மாநில அந்தஸ்து பெற வேண்டும். இல்லாவிட்டால் கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும். ரங்கசாமிக்கு கொள்கையோ, கோட்பாடோ இல்லை. அவருக்கு எது சரியோ, அதை செய்கிறார். 

மக்களாட்சிக்கு கவர்னரே தேவையில்லை என்பதுதான் எங்கள் கருத்து. பாரதிய ஜனதா கட்சி ஆளாத மாநிலங்களில் உளவு பார்க்கவே ஆளுநர்கள் நியமிக்கப்படுகின்றனர். தெலுங்கானாவில் சந்திரசேகர்ராவ் பிரதமருக்கு எதிராக உள்ளார். புதுவை சிறிய மாநிலம். காங்கிரஸ் தவிர பிற கட்சிகள் பாஜகவிடம் சரணடைந்துவிட்டன. புதுவையை பிடித்துவிட்டால் தென் தமிழகத்தை பிடித்துவிடலாம் என பாஜவினர் நினைக்கின்றனர். 9 ஆண்டு பாஜக மத்தியில் ஆட்சியை முடித்துவிட்டது. ஏதாவது ஒரு நல்லது நாட்டுக்கு செய்துள்ளதா? அடித்தட்டு மக்களின் வரியை இரண்டரை லட்சம் கோடி கடனாக அதானிக்கு வழங்கியதை தவிர வேறு என்ன நல்லது செய்துள்ளது?” எனக் கேள்வி எழுப்பினார்.