பயமா எங்களுக்கா?.. பா.ஜ.க.வுக்கு சவால் விடுத்த டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர்..

 
ஆம் ஆத்மி

அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை என அனைவரையும் எங்களிடம் அனுப்புங்கள் என்று பா.ஜ.க.வுக்கு டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சவால் விடுத்துள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று காணொளி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: வரும் அடுத்த சில நாட்களில் (பஞ்சாப் தேர்தலுக்கு முன்பு) டெல்லி சுகாதாரத் துறை அமைச்சரை (சத்யேந்தர் ஜெயின்) அமலாக்கத்துறை கைது செய்யும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் மூலம் தெரியவந்தது. அவர்கள் மிகவும் வரவேற்கப்படுகிறார்கள். 

அரவிந்த் கெஜ்ரிவால்

முன்பு கூட, சத்யேந்தர் ஜெயின் மீது மத்திய அரசு சோதனை நடத்தியது. ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. சத்யேந்திர ஜெயின் மட்டுமல்ல, அவர்கள் ( பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு) அனைத்து ஏஜென்சிகளையும் (அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை) எனக்கு, மணிஷ் சிசோடியா, பகவந்த் மான் ஆகியோரிடம் அனுப்பலாம். நாங்கள் அவர்களை புன்னகையுடன் வரவேற்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமலாக்கத்துறை

டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஒரு வீடியோவில், சன்னி ஜி (பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி) போல் நாமும் பயப்படுவோம் என்று பா.ஜ.க. நினைத்தால், அவர்கள் தவறு. அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை என அனைவரையும் அனுப்புங்கள் என்று பா.ஜ.க.வுக்கு சவால் விடுக்கிறேன். நாங்கள் யாருக்கும் பயப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.