"நான் ராஜா இல்லை"... விரக்தியில் ரங்கசாமி பேசிய ஆடியோ லீக் - கழுத்தறுத்த பாஜக!
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ பாஜகவுக்கு பேருதவியாக இருந்தவர் என்ஆர் காங்கிரஸ் தலைவரும் இப்போதைய முதலமைச்சருமான ரங்கசாமி. பின்னர் விரைவில் தேர்தல் நடத்தப்பட்டது. மக்களுக்கு ஏற்கெனவே காங்கிரஸ் ஆட்சி மீது அதிருப்தி நிலவியதால், ரங்கசாமி பக்கமே வெற்றி காற்று வீச ஆரம்பித்தது. இதைச் சரியாகப் புரிந்துகொண்ட பாஜக ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி ரங்கசாமியை வழிக்கு கொண்டுவந்தது. அதுமட்டுமில்லாமல் முதன்முறையாக பாஜகவைச் சேர்ந்தவர் சபாநாயகர், முதல் பாஜக அமைச்சர் என ஆசையையும் தீர்த்துக் கொண்டது.
மறுபுறம் ரங்கசாமி ஒரு கணக்கு போட்டார். மத்தியில் இருக்கிறார்கள். யுனியன் பிரதேச அரசு மத்திய அரசைப் பகைத்துக் கொள்ள முடியாது. ஆகவே கேட்டதெல்லாம் செய்வார்கள் என பேராசைப்பட்டார். வழக்கம் போலவே தன்னுடைய இன்னொரு முகத்தை பாஜக காட்ட ஆரம்பித்துவிட்டது. முதலமைச்சர் ரங்கசாமி அனுப்பும் கோப்புகளுக்கு தலைமைச் செயலகத்திலிருந்தோ, ஆளுநரிடமிருந்தோ எந்த ஒப்புதலும் வழங்கப்படுவதில்லை. உண்மையை சொல்லப்போனால் தீபாவளிக்காக அறிவிக்கப்பட்ட 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரையை இப்போது வரை அரசால் முழுமையாக கொடுக்க முடியவில்லை.
ஊழியர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட எதையும் இன்னும் நடைமுறைப்படுத்த மத்திய அரசு பச்சைக்கொடி காட்டவில்லை. இதனிடையே வடகிழக்கு பருவமழை புதுச்சேரி மற்றும் காரைக்காலையும் ஆட்டிப்படைத்தது. வழக்கத்திற்கு மாறாக பெய்த கனமழையால் பல மக்களின் வீடுகள் சேதமடைந்தன. வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்தனர். இதனையொட்டி சிவப்பு அட்டைதாரர்கள், மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு ரூ.5,000 மழை நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார் ரங்கசாமி.
ஆனால் மஞ்சள் அட்டைதாரர்கள் உள்பட அனைவருக்குமே இந்த நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென திமுக, காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். அதன் பேரில் அனைவருக்கூம் ரூ.5,000 நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர். ஆனால் இதனை தற்போது வரை நடைமுறைப்படுத்த முடியவில்லை என தெரிகிறது. இதுதொடர்பாக ரங்கசாமி விரக்தியோடு பேசும் ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காலைச் சேர்ந்த நபர் ஒருவர் ரங்கசாமியை போனில் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது பரஸ்பரம் நலம் விசாரித்துவிட்டு அந்த நபர் மேட்டருக்கு வந்திருக்கிறார். ரங்கசாமியிடம், “நீங்கள் அறிவித்த மழை நிவாரணம் எப்போது கிடைக்கும் ஐயா?’’ என அவர் கேட்கிறார். அதற்கு பதில் அளித்த முதல்வர் ரங்கசாமி, "நான் மட்டும் ராஜாவா இருந்தால் பரவால்லப்பா. ஆனால் நான் ராஜா கிடையாது. மந்திரிகள்லாம் இருக்காங்க. எனக்கு மேலேயும், கீழேயும் நிறைய பேர் இருக்காங்க. இது பாண்டிச்சேரி. அப்படித்தான் இருக்கும்” என்று பதிலளித்தார். ஒரு முதலமைச்சருக்கே இந்த நிலைமையா என நெட்டிசன்கள் நொந்துகொண்டு இந்த ஆடியோவை பகிர்ந்து வருகின்றனர்.