"காலை வாருவது தான் கூட்டணி தர்மமா?" - குளுகுளு அறையில் கொதித்த ராமதாஸ்!
பாமக நிறுவனர் ராமதாஸ் சில நாட்களாகவே விரக்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் 40க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக அரசியலில் இருந்தும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக சட்டப்பேரவை தேர்தல் அவரின் மனநிலையை டோட்டலாகவே விரக்தியின் உச்சத்திற்கு கொண்டுசென்று விட்டதாகக் கூறப்படுகிறது. கூட்டணியில் இருந்த அதிமுக உள்ளடி வேலையில் ஈடுபட்டு பாமகவின் வெற்றியைப் பறித்துவிட்டது என மறைமுகமாக சொல்கிறார் ராமதாஸ்.
இதனால்தான் உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டார். அதிலும் அவர் எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை. இதனால் தன் கட்சி ஆட்களிடமே சீறினார். "என்ன செய்வீர்களோ எனக்கு தெரியாது நாம் ஆட்சியைப் பிடிக்க வேண்டும். அன்புமணியை கோட்டையில் அமர வைக்க வேண்டும். கோட்டையில் பாமகவின் கொடி பறக்க வேண்டும். அதற்கு அனைவரும் தீவிரமாக உழைக்க வேண்டும்" என ஏமாற்றத்தின் வெளிப்பாடாக பல்வேறு பாமக கூட்டங்களில் பேசி வருகிறார். நேற்று சேலத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டத்திலும் வெடித்து பேசியிருக்கிறார்.
கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், "நான் உங்களை சரியாக வழிநடத்தவில்லையா? வன்னியர்கள் மட்டும் 2 கோடி மக்கள் இருக்கிறார்கள். அவர்களை நம்பி தானே கட்சியை ஆரம்பித்தேன். எந்த கட்சியில் வன்னியர்கள் இருந்தாலும், ஓட்டு மட்டும் மாம்பழத்திற்கு போட வேண்டும்... அப்படி மட்டும் செய்தால், 70 முதல் 80 எம்எல்ஏ வரமுடியும்... பிறகு மற்ற சமூகத்தினரும் ஏற்று கொள்வார்கள். வட தமிழகத்தில் நாம் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில் ஆட்சியைக் கைப்பற்றி இருக்க வேண்டும்.
பாமக தனித்துப் போட்டியிட்டபோது 4 இடங்களில் வெற்றி பெற்றது. சிலரது கருத்தின் அடிப்படையில் கூட்டணி அமைத்தோம். ஆனால், கூட்டணி என்றால் இப்போதெல்லாம் காலை வாருவது என்று அர்த்தம். பாமக வெற்றிபெறக் கூடாது என கூட்டணி தர்மம் அதர்மம் ஆகிவிட்டது. 23 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் வெறும் 5 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம். வன்னியர்களின் வாக்கு வங்கி எங்கே போனது. “தமிழகத்தில் மாற்றம் கொண்டு வருவேன்” என்ற அன்புமணியை நீங்கள் வெற்றிபெறச் செய்யவில்லை.
தொகுதிகள் வேண்டாம், தேர்தலும் வேண்டாம். வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குங்கள் என்றோம். 2 கோடி வன்னியர்களை நம்பித்தான் இந்த தேர்தல் வரையிலும் வந்திருக்கிறோம். ஆனால், கூட்டணி கட்சிகளிடம், தொகுதிகளை கேட்டுப் பெறக்கூடிய நிலையில் தான் இருக்கிறோம். பாமக தான் உங்களை படிக்கச் சொல்கிறது. ஆனால், ஆண்ட கட்சிகளும், ஆளுகிற கட்சியும் உங்களை படிக்கவும், குடிக்கவும் சொல்கிறது” என்றார்.