மோடி அரசு ஆரம்பத்திலிருந்தே பொதுமக்களின் உரிமைகளை அழிக்க முயற்சித்து வருகிறது... ராகுல் காந்தி குற்றச்சாட்டு

 
பிரதமர் மோடி

மோடி அரசு ஆரம்பத்திலிருந்தே பொதுமக்களின் உரிமைகளை அழிக்க முயற்சித்து வருகிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், பொதுமக்களின் உரிமைகள் இல்லாத உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தால் என்ன பயன்? மோடி அரசு ஆரம்பத்திலிருந்தே பொதுமக்களின் உரிமைகளை அழிக்க முயற்சித்து வருகிறது. அடிப்படை உரிமைகள் உட்பட இந்த உரிமைகள் இல்லாத இந்தியாவை உங்களால் கற்பனை கூட செய்ய முடியுமா?

ராகுல் காந்தி

கல்வி பெறும் உரிமை - இன்று ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கு செல்கிறது. தனக்கும் நாட்டுக்கும் ஒரு சிறந்த நாளை உருவாக்குகிறது. வேலைவாய்ப்புக்கான உரிமை - பா.ஜ.க.வின் கடுமையான எதிர்ப்பை மீறி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி  பொதுமக்களுக்கு வேலைப் பாதுகாப்பை வழங்கியது. இது கோவிட் நோயின் கடினமான காலங்களில் கூட நாட்டு மக்களுக்கு உதவியது.

தகவல் அறியும் உரிமை சட்டம்

தகவல்  அறியும் உரிமை- வெளிப்படைத்தன்மை என்பது ஜனநாயகத்தின் மற்றொரு பெயர். கேள்வி கேட்கவும் பதில்களை பெறவும் மக்களுக்கு உரிமை உண்டு. தகவல் அறியும் உரிமை சட்டம் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியால் கொண்டு வரப்பட்டது. இதில் எந்த  உரிமையை பிரதமர் எதிர்க்கிறார்? மேலும் ஏன்? என்று பதிவு செய்து இருந்தார்.