அதிமுகவிலிருந்து ஈபிஎஸ், ஓபிஎஸ்- ஐ துரத்தி அடிக்க வேண்டும்- புகழேந்தி
சசிகலா அதிமுகவில் இருந்திருந்தால் உட்கட்சித் தேர்தல் பிரச்னை இருந்திருக்காது என அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, "அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை சரியாக நடத்தவில்லை. என்ன நடந்தாலும் சரி, நியாயம் கிடைக்கும் வரை விடப்போவதில்லை. அதில் எனது பங்கு நிச்சயம் இருக்கும். நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். ஜெயகுமார் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த ஒரே மனிதர். லேட்டஸ்ட் பபூன் ஜெயக்குமார் தான்.
அதிமுகவின் உட்கட்சி தேர்தல் சட்ட விதிகளின் படி திருத்த வேண்டிய அவசியமே, இல்லை, திருத்துவதற்கு இவர்கள் யார்?? கட்சியிலிருந்து இபிஎஸ், ஓபிஎஸ் துரத்தி அடிக்கவேண்டும், யார் வேண்டுமானாலும் அந்த தலைவர் பதவிக்கு வரலாம். கட்சித் தொண்டர்கள் தேர்வு செய்ய வேண்டும். சுதந்திரமாக தொண்டர்களை ஓட்டு போட வைக்க வேண்டும்.
தர்மயுத்தம் அடிப்படையில்தான் அதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்றது என்று ஓபிஎஸ் இப்போது சொல்கிறார். இவர் தான் அன்று எடப்பாடி பழனிச்சாமி அரசு ஊழல் அரசு, அம்மாவின் சாவில் மர்மம் இருக்கிறது என சமாதியில் தர்மயுத்தம் செய்தவர் என்பதை யாரும் மறக்கவில்லை. அம்மாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் ஆட்சி மன்றக்குழுவிற்கு வேலை இல்லை , எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் ஜால்ரா அடிக்கிறார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் , போயஸ் கார்டன் இல்லத்திற்கு வாரிசுதாரராக உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள தீபா, தீபக் இதை ஒப்புக்கொண்டு ஜெயலலிதா வாழ்ந்த இல்லை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும்.. சசிகலா அதிமுகவில் இருந்திருந்தால் உட்கட்சித் தேர்தல் பிரச்சினை இருந்திருக்காது” எனக் கூறினார்.