திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக தொடர்ந்தால் அதிமுகவில் ஒரு நாற்காலி கூட மிஞ்சாது- புகழேந்தி

 
Pugalendhi Pugalendhi

எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கடிதம் எழுதி ஓபிஎஸ் இடம் கொடுத்து விட்டு ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையை  ஏற்றுக்கொள்ளட்டும், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படலாம் எனக் கூற வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளர் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். 

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத் தெருவில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அவரது ஆதரவு கொள்கை பரப்பு செயலாளரான புகழேந்தி மற்றும் கரூர் மாவட்ட செயலாளர்களுடன் பெரிய குளத்தில் உள்ள ஓ. பன்னீர் செல்வத்தை சந்திக்க வந்த பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

Advertisement

அப்போது பேசிய அவர், “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று தலைமை தேர்தல் ஆணையர் சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் ஏற்க மறுத்துள்ளனர்.  அரசு தரப்பில் அனுப்பிய கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்ப வேண்டும் என்பது தான் நடைமுறை. இது என்ன காதல் கடிதமா? வாங்க மாட்டேன் என திருப்பி அனுப்புவது? இந்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகள் அடிப்படையில் தான் மாநில தேர்தல் ஆணையர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று கடிதம் அனுப்பி உள்ளனர். எனவே இந்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகள் அடிப்படையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி  ஆகியோர் தான்  தொடர்கின்றனர்.


ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனை  கூட்டத்திற்கு மத்திய அமைச்சகம் சார்பில் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இடைக்கால பொதுச்செயலாளர், பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிச்சாமியை குறிப்பிட்டு அனுப்பியது முன்னாள் சபாநாயகர் தம்பிதுரையின் தூண்டுதலின் காரணமாகவே. திண்டுக்கல் சீனிவாசன்  பொருளாளராக தொடர்ந்தால் அதிமுகவில் ஒரு சேர் கூட மிச்சம் இருக்காது. சொத்துக்கள் அனைத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு தான் விடுவார்கள்.  சசிகலாவை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என சொல்பவர்கள் யாராவது அவரது காலில் விழாமல் இருந்திருக்கிறார்களா? அவரது காலில் விழந்ததால் தான் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக  முடிந்தது.  சசிகலாவை பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு தகுதி கிடையாது.  பொங்கல் பண்டிகைக்கு கரும்பு வழங்க வேண்டும் என முதலில் அரசுக்கு கோரிக்கை விடுத்தது  ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை விடுத்ததால் தான் ஸ்டாலின் செயல்படுத்தினார் என்பது ஏற்புடையது அல்ல.  எடப்பாடி பழனிச்சாமியின் அறிக்கைக்கு இதுவரை முதலமைச்சர் எவ்வித செவியும் சாய்க்கவில்லை.

இறுதியாக தற்போது கூட எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கடிதம் கொடுத்து விட்டு ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையை  ஏற்றுக்கொள்ளட்டும், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே ஓ.பி.எஸ். விருப்பமாகும்” எனக் கூறினார்.