பழனிசாமியை அங்கிகரிக்கக்கூடாது- தேர்தல் ஆணையத்திற்கு சென்ற ஓபிஎஸ் அணி

 
ops

அ.தி.மு.க வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையத்தில் ஒ.பி.எஸ் அணியை சேர்ந்த புகழேந்தி மனு அளித்துள்ளார். 

கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் நெருங்குவதால் தன்னை அ.திமு.க  வின் பொதுச் செயலாளராக அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் நேற்றைய தினம் இது தொடர்பான முடிவை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் 10-நாட்கள் கால அவகாசம் வழங்கியது.

அ.தி.மு.க வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்குமா அல்லது நிராகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அ.தி.மு.க ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி  டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.  அந்த மனுவில் அ.தி.மு.க என்ற கட்சி தற்போதும் ஒருங்கிணைப்பாளர் என்ற தலைமையின் கீழ் தான் செயல்பட்டு வருகிறது. ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பி.எஸ் தான் உண்மையான அ.தி.மு.க என்றும் கர்நாடக தேர்தலில் ஓ.பி.எஸ் கையெழுத்திடும் வேட்பாளரின் வேட்பு மனு மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

election commision

எடப்பாடி பழனிசாமி, தன்னிடம் தான் கட்சி உள்ளது என்று கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டும் உடனே அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து தேர்தல் ஆணையத்தை தவறாக வழிநடத்த முயல்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார். பொதுச்செயலாளர் தேர்வு மட்டுமில்லாமல் அ.தி.மு.க செயற்குழு கூட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட 18 வழங்குகளும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதால் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக முடிவெடுக்க கூடாது. சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ள மூல வழக்கே முடிவெடுக்கும் என்ற உச்சநீதிமன்றத்தின் ஆணையை தேர்தல் ஆணையத்தில் சுட்டிக் காட்டி தற்போதைய சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க வின் பொதுச் செயலாராக அங்கீகரிக்க கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளார்.