எக்காரணம் கொண்டும் காங்கிரசை பா.ஜ.க.வுக்கு மாற்று சக்தியாக பார்க்க முடியாது... பினராயி விஜயன்

 
கேரளாவில் பறக்கும் பினராயி விஜயனின் கொடி!

எக்காரணம் கொண்டும் காங்கிரசை பா.ஜ.க.வுக்கு மாற்று சக்தியாக பார்க்க முடியாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

கேரள மாநிலம்  எர்ணாகுளம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டின் தொடக்க விழாவில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில் கூறியதாவது: ஜெய்ப்பூர் கூட்டத்தில் ராகுல் காந்தி முன்வைத்த இந்து அரசு என்ற யோசனை, காங்கிரஸால் ஏற்கப்பட்ட மென்மையான இந்துத்துவா அரசியலின் ஒரு பகுதியாகும். காங்கிரஸ் எப்போதுமே இந்துத்துவா நிலைப்பாட்டை எடுத்துள்ளது. வகுப்புவாத திருப்திப்படுத்தும் கொள்கையும் அதில் உள்ளது. ராகுல் காந்தியின் பேச்சு அதை உறுதிப்படுத்துகிறது. முந்தைய கொள்கையின் ஒரு பகுதியாக காங்கிரஸ் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக பா.ஜ.க.வை வழிநடத்துகின்றனர். 

ராகுல் காந்தி

காங்கிரஸ் மீது மக்களும், அந்த கட்சியின் தொண்டர்களும் நம்பிக்கை இழந்து விட்டனர். எக்காரணம் கொண்டும் காங்கிரசை பா.ஜ.க.வுக்கு மாற்று சக்தியாக பார்க்க முடியாது. இடதுசாரிகளுக்கு மக்களிடம் நல்ல நம்பகத்தன்மை உள்ளது. பா.ஜ.க.வை கடுமையாக எதிர்க்கும் ஜனநாயக கட்சிகளுடன் ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி வைப்பதுதான்  செய்ய முடியும். மதச்சார்ப்பற்ற அரசை அமைப்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. அகில இந்திய அளவில் பா.ஜ.க.வுக்கு பதிலாக முன்னேற மதச்சார்பற்ற கட்சிகளையும், குழுக்களையும் பயன்படுத்த வேண்டியதுதான். 

காங்கிரஸ்

கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக ஜமாத் இ இஸ்லாமி போன்ற அமைப்புகளுடன் இந்திய யூனியன் முஸ்லீம்  லீக் கூட்டணி அமைக்கிறது.  ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பா.ஜ.க. இப்போது மாநிலத்தில் மதவாத பிரிவினையை உருவாக்க முயற்சிக்கின்றன. அதை நாம் புதிய ஊடகங்களில் காணலாம். சங்பரிவாரும், இஸ்லாமிய தீவிரவாதிகளும் வகுப்புவாத பதட்டங்களை உருவாக்க விரும்புகிறார்கள். இரு குழுக்களும் ஒருவருக்கொருவர் உதவுகின்றன. அவர்கள் சவால்களை முன்னெடுத்து  வருகின்றனர், இது கேராளவின் மதச்சார்பின்மையை அழிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.