பன்னீர்செல்வமும் பழனிச்சாமியும்... அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. ஜெயக்குமார் பரபரப்பு
![u](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/652ea6f7138f3e93b7bd932496e64be3.jpg)
பன்னீர்செல்வமும் பழனிச்சாமியும் இரு தரப்பிலும் வேட்பாளர்களை களம் இறக்கியதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் விறுவிறுப்படைந்தது. இருவருக்கும் இடையேயான இந்த போட்டோ போட்டியால் இரட்டை இலை சின்னம் முடங்கும் சூழல் உருவாகி இருந்தது. இதனால் பாஜக நிர்வாகிகள் பன்னீர் செல்வத்திற்கும் பழனிச்சாமிக்கும் இடையே சமாதான தூதுவர்களாக இருந்து செயல்பட்டார்கள். இரட்டை இலை சின்னத்துக்கு சிக்கல் வந்து விடக்கூடாது என்று இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கிடையில் இரட்டை இலை சின்னம் கேட்டு எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பொதுக்குழுவைக் கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டது. இதனால் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் பொதுக்குழுவில் பழனிச்சாமி வேட்பாளருக்கு 95% ஆதரவு இருந்ததால் தேர்தல் ஆணையம் பழனிச்சாமி தரப்புக்கே இரட்டை இலையை ஒதுக்கியது. இதனால் பன்னீர்செல்வம் வேட்பாளர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இதன் பின்னர் ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் போட்டியிலிருந்து பன்னீர்செல்வம் தரப்பு விலகியது.
இது குறித்து பன்னீர்செல்வம் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன், இரட்டை இலை சின்னம் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவோம். இரட்டை இலை சின்னம் இபிஎஸ் தரப்புக்கு கிடைத்ததால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை. இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பிரச்சாரம் செய்வோம் என்றவரிடம், பழனிச்சாமியும் பன்னீர் செல்வம் சந்திப்பார்களா என்ற கேள்விக்கு எதுவும் நடக்கலாம் என்று தெரிவித்து பரபரப்பை கூட்டி இருந்தார்.
எதுவும் நடக்கலாம் என்று கு.ப.கிருஷ்ணன், கூறி இருந்த நிலையில் அது குறித்து பழனிச்சாமி ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் விளக்கம் அளித்திருக்கிறார் . ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக சத்திய பிரதா சாகுவிடம் புகார் அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, பழனிச்சாமியும் பன்னீர்செல்வம் சந்திக்கும் சந்திப்பதற்கு வாய்ப்பே இல்லை . குட்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறார்கள் ஓபிஎஸ் தரப்பினர் என்றார் .
அவர் மேலும், திமுகவின் பி டீம் ஆக இருந்தாலும் பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னத்தை முடக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கிறார். அதிமுக தொண்டர்கள் பன்னீர் செல்வத்தின் செயல்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் . பன்னீர்செல்வத்தால் இரட்டை இலையை முடக்க முடியவில்லை. ஆனால் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பேன் என்று சொல்பவர்கள் தென்னரசு பெயரை சொல்ல மறுப்பது ஏன் அதுவே முரண்பாடு தானே என்றவர், பன்னீர்செல்வம் குறித்த செங்கோட்டையனின் பேச்சு அவருடைய தனிப்பட்ட கருத்து. அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் . ஆனால் இணைப்பு மட்டும் சாத்தியம் இல்லை என்றார் உறுதியாக.