பழனிச்சாமியா? ஸ்டாலினா? யாருடைய ஆட்சி சிறப்பான ஆட்சி? லயோலா கள ஆய்வு முடிவு
![sஎ](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/0b1727d9eb839c22027665c6bd1d8d73.jpg)
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியா? தற்போதைய முதல்வர் மு. க. ஸ்டாலினா? யாருடைய ஆட்சி சிறப்பான ஆட்சி என்பது குறித்து லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நடத்திய கள ஆய்வு முடிவு வெளியிடப்பட்டிருக்கிறது.
அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் தமிழ்நாட்டின் முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த 2016ம் ஆண்டில் மறைந்த பின்னர் திடீரென்று பன்னீர்செல்வம் முதல்வராக பதவி ஏற்று கொண்டார். அதன் பின்னர் அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டு எம்எல்ஏக்கள் அனைவரும் பன்னீர்செல்வத்துக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டதால், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக ஆனார்.
முதல்வர் பொறுப்பை ஏற்கும் எடப்பாடி பழனிசாமி ஒரு மாதம் கூட தாக்குப் பிடிக்க முடியாது என்று அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எதிர் தரப்பினர் கடுமையாக விமர்சித்து வந்தார்கள் . ஆனால் அந்த கணக்கை எல்லாம் தவிடு பொடியாக்கிவிட்டு நான்காண்டு காலம் தாக்குப்பிடித்து ஆட்சி நடத்தினார் பழனிச்சாமி. கொரோனா உள்ளிட்ட பல்வேறு நெருக்கடி காலகட்டங்களிலும் ஆட்சியை நடத்திக் காட்டினார் எடப்பாடி பழனிச்சாமி.
அதன் பின்னர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெறாது. ஸ்டாலின் ராசி அப்படி. அவர் ராசிக்கு திமுகவும் வெற்றி பெறாது . அவரும் முதல்வர் ஆக மாட்டார் என்ற கடும் விமர்சனங்கள் இருந்தன. ஆனால் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு. க. ஸ்டாலின் முதல்வரானார். திமுக ஆட்சிக்கு வந்து 20 மாதங்களுக்கு மேல் ஆகிறது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு லயோலோ கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கள ஆய்வு நடத்தியுள்ளனர். அப்படியே தமிழ்நாட்டில் யாருடைய ஆட்சி சிறப்பான ஆட்சி என்பது குறித்தும் கள ஆய்வு நடத்தியிருக்கிறார்கள்.
லயோலா கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் நடத்திய இந்த கலா ஆய்வில் எடப்பாடி பழனிச்சாமிக்கு 53 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர். மு. க. ஸ்டாலினுக்கு 42 சதவீதம் பேர் மட்டும் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் பழனிச்சாமியா? ஸ்டாலினா? என்ற கேள்விக்கு, எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி தான் சிறப்பான ஆட்சி என்று சொல்கிறது, லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நடத்திய கள ஆய்வு முடிவு.