மோடி ஒரு “ஏமரா மன்னன்” – திருக்குறளை சுட்டிக்காட்டி வெளுத்து வாங்கிய ப.சிதம்பரம்!
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் மத்திய அரசின் திட்டங்களையும் பிரதமர் மோடியின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். பொருளாதார நடவடிக்கைகளின்போதும் அரசுக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்குகிறார். ஆனால் அதையெல்லாம் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் தான் சொன்னது தான் சட்டம் என்ற மனப்பான்மையில் செயல்படுகிறது.
மோடி அரசின் இந்தப் போக்கைக் கண்டித்து தற்போது ட்விட்டரில் சிதம்பரம் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அவர் தனது ட்வீட்டில், “மோடி தலைமையிலான அரசின் 7ஆவது ஆண்டு முடிவுக்கு வந்துள்ளது. இந்தக் காலக்கட்டங்களில் பணவீக்க உயர்வு, தொழில்துறை உற்பத்தியில் வீழ்ச்சி, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி, பங்குச் சந்தையில் வீழ்ச்சி என தொடர்ந்து இந்தியா வீழ்ச்சியே சந்தித்துவருகிறது.
மக்களிடம் அதிக வரி விதித்திருக்கிறார்கள். அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மையால் மக்களில் அதிகமானோர் வறுமையால் கடன் வாங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவையனைத்துமே 2016ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையிலிருந்து ஆரம்பமானது. அதன் தொடர்ச்சியாகவே இவ்வளவு விளைவுகளையும் இந்தியா சந்தித்திருக்கிறது.
இதற்குக் காரணம் தனது அரசின் கொள்கை முடிவுகள் தான என மத்திய அரசு ஏற்க மறுக்கிறது. மோடியிடம் இருக்கும் குறை அவர் விமர்சனங்களைப் பொறுத்துக் கொள்ள மாட்டார். மேலும் பிரபல பொருளாதார நிபுணர்களின் கருத்துகளையும் அவர் மதிப்பலில்லை. இதற்கு ஒரு திருக்குறளை மேற்கோள் காட்டலாம்.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும் – குறள் எண் 448” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குறளின் பொருள்: தீமைகள் நேரும்போது அதைக் கடிந்து சொல்லும் பெரியோர்களின் பேச்சைக் கேட்காத பாதுகாவலற்ற அரசன் பகையாளி இல்லாவிட்டாலும் தானே கெடுவான்.