ஓபிஎஸ்-சசிகலா-டிடிவி : மதுரை மாநாடு
![ttv](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/28a0baf09b7edc8512cd9c7275d314e2.jpg)
திருச்சி மாநாட்டிற்கு பிறகு சேலத்தில் தான் அடுத்த மாநாடு நடத்த பன்னீர்செல்வம் அணியினர் ஏற்பாடுகள் செய்து வந்தனர். ஆனால் அடுத்த மாநாடு மதுரையில் தான் என்பது தற்போது முடிவாகி இருக்கிறது.
ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பன்னீர்செல்வமும் பழனிச்சாமியும் பிரிந்து விட்டதை அடுத்து பன்னீர்செல்வம் திருச்சியில் மாநாட்டை கூட்டி தனது ஆதரவாளர்களை திரட்டி தனது பலத்தை நிரூபித்தார். பன்னீர் செல்வத்திற்கு பக்கபலமாக நிற்கிறார் மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரன். எம். ஜி .ஆர் அமைச்சரவையில் அவர் முக்கிய அங்கம் வகித்தவர்.
திருச்சி மாநாட்டிற்கு பின்னர் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து பேசி இருக்கிறார் பன்னீர்செல்வம். இதன் பின்னர் சசிகலாவையும் சந்தித்து பேச இருக்கிறார் பன்னீர்செல்வம் என்று தகவல் பரவுகிறது. இதனால் தான் ஓபிஎஸ்-ம் நானும் விதியால் பிரிந்து விட்டோம். ஆனால் இப்போது இணைந்து விட்டோம். அனைவரும் ஒன்று சேர்ந்து தான் அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்று கூறி வருகிறார் டிடிவி தினகரன்.
அதாவது, எடப்பாடி பழனிச்சாமி வசம் சென்று இருக்கும் அதிமுகவை தங்கள் பக்கம் மீட்டெடுக்க வேண்டும் என்று அவர் சொல்லி வருகிறார். பன்னீர்செல்வம் திருச்சியில் மாநாடு கூட்டியதற்கு எதிராக பழனிச்சாமி ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் மாநாட்டை கூட்டுகிறார். பழனிச்சாமியின் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு , ஆர். பி. உதயகுமார் ஆகியோர் மதுரை மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று இப்போதே கூட்டத்தை திரட்ட ஆரம்பித்து விட்டனர்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடக்கும் இந்த மாநாடு முடிந்த பின்னர் பன்னீர்செல்வம்- சசிகலா -டிடிவி தினகரன் மூன்று பேரும் இணைந்து பங்கேற்கும் மாநாடு மதுரையில் நடக்க இருக்கிறது . அந்த மாநாட்டுக்கான வேலைகளையும் பன்னீசெல்வம் -தினகரன் தரப்பினர் செய்து வருகின்றனர் . இந்த மாநாட்டில் சசிகலாவை முக்கியமாக பங்கேற்க வைக்க பண்ருட்டி ராமச்சந்திரன் பேசிய வருவதாக தகவல் பரவுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் தங்கள் ஆதரவை திரட்டி வருவது தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.