திராணியற்ற திமுக அரசே.. வெட்கக்கேடு - வெளுத்து வாங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்!
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரூர் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த அக்.22இல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தம் உள்ள 12 உறுப்பினர்களில், அதிமுகவில் 8 பேர், திமுகவில் 4 பேர் உள்ளனர். இச்சூழலில் தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அதிமுக வார்டு உறுப்பினர்களை தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி அக்கட்சியினர் மிரட்டினர்.
தேர்தல் நாளன்று திமுக வெற்றிபெற முடியாது என்பதால், தேர்தல் நடத்தும் அதிகாரி அவர்களின் மிரட்டலுக்குப் பயந்து தேர்தலைத் தள்ளிவைத்தார். அதிமுக தரப்பில் இதற்கு காரணம் கேட்டபோது, காவல்துறை அதிகாரிகளை வைத்து தாக்குதல் நடத்தி அங்கிருந்தவர்கள் மீது பொய் வழக்குப் போட்டுள்ளனர். அதன் பிறகு இதுதொடர்பாக அதிமுக வார்டு உறுப்பினர்கள் மதுரைக்கிளை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதில், நீதிபதிகள் தேர்தலை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டனர்.
இதனால் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று தெரிந்துகொண்ட அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் தூண்டுதலின்பேரில், அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை வைத்து, அதிமுக வார்டு உறுப்பினர்களை மிரட்டியும், அச்சுறுத்தியும் வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, 2வது வார்டு உறுப்பினர் அலமேலுவின் கணவர் மீது, குட்கா வைத்திருந்ததாக ஜாமீனில் வெளியில் வர முடியாத பிரிவுகளில் காவல் துறையினர் இரண்டு பொய் வழக்குகளைப் போட்டுள்ளனர்.
அலமேலு மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து மிரட்டப்படவே வேறு வழியின்றி அவர்கள் நவம்பர் 18 அன்று திமுகவில் சேர்ந்துவிட்டனர். அதேபோல 10வது வார்டு உறுப்பினர் நல்லமுத்து வடிவேலும் மிரட்டலுக்குப் பயந்து திமுகவில் சேர்ந்துவிட்டார். இதுபோல், கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து, அதிமுகவைச் சேர்ந்தவர்களை திமுகவில் சேருமாறு, மாவட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் திமுகவில் சேரவில்லை என்றால், அவர்கள் மீது ஜாமீனில் வெளியில் வர முடியாத பிரிவுகளில் பொய் வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன. அதிகாரிகளை வைத்து மிரட்டியும் வருகின்றனா். நேர்மையாக இருக்க வேண்டிய அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் திமுகவிற்கு ஆள் சேர்ப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று. மேலும், அரசியல் ரீதியாக அதிமுகவைச் சந்திக்க முடியாத திராணியற்ற திமுகவை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.