கலைஞர் உணவகமாகும் "அம்மா உணவகம்" - கொதிக்கும் ஓபிஎஸ்!
அதிமுக ஆட்சியில் நகர்ப்புற ஏழைகளின் பசிப்பிணியை தீர்க்க உருவாக்கப்பட்டது தான் அம்மா உணவகம். மாநகராட்சி, நகராட்சி போன்ற நகர்ப்புற பகுதிகளில்தான் அம்மா உணவகங்கள் ஏற்படுத்தப்பட்டன. சென்னையில் ஒவ்வொரு வார்டுக்கும் 2 அம்மா உணவகங்கள் இருக்கின்றன. மொத்தமாக 600க்கும் மேற்பட்ட உணவகங்கள் தமிழ்நாடு முழுவதும் செயல்படுகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அம்மா உணவகங்கள் செயல்படுமா என்ற கேள்வி எழுந்தது.
செயல்படும் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறது தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள். இம்மாத தொடக்கத்தில் சென்னை வெள்ளத்தில் மூழ்கியது. ஏழை, எளிய மக்கள் பசியாற அம்மா உணவகம் வரப்பிரசாதமாக அமைந்தது. இத்திட்டம் வழக்கம்போல செயல்படும் என்பதையே அரசு குறிப்பால் உணர்த்தியுள்ளது. இச்சூழலில் ஏற்கெனவே தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல, 500 கலைஞர் உணவகம் அமைக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
இதனை கண்டித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கலைஞர் உணவகம் அமைப்பது அம்மா உணவகம் என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் நோக்கம் கொண்டதாகவும் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாகவும் உள்ளது. அதற்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன். 700 அம்மா உணவகங்களில் மலிவான விலையில் உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பேரிடர் காலங்களில் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. காலப்போக்கில் அம்மா உணவகம் என்ற திட்டத்தையே கலைஞர் உணவகம் என்று மாற்றுவதற்கான ஒரு முயற்சியாக அமைச்சரின் பேச்சு அமைந்திருக்கிறது.
திமுக அரசு, வரும் காலங்களில் 500 சமுதாய உணவகங்களை கலைஞர் உணவகம் என்ற பெயரில் அமைக்க உள்ளதாக தெரிவித்திருப்பது, "அம்மா உணவகம்" என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் நோக்கத்தோடும், அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாகவும் உள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது. #AmmaUnavagam pic.twitter.com/YogpSoREQR
— O Panneerselvam (@OfficeOfOPS) November 26, 2021
நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை இரு பெயர்களில் செயல்படுத்துவது என்பது இதுவரை நடைமுறையில் இல்லாத வினோதமான ஒன்று. இது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்றே நான் கருதுகிறேன். ஏழை, எளிய மக்களுக்காக குறைந்த விலையில் உணவகங்களை அமைப்பது என்பது அம்மா அவர்களின் சிந்தனையில் உதித்த ஓர் அற்புதமான திட்டம், எனவே, இந்தத் திட்டம் ‘அம்மா உணவகம்’ என்ற பெயரிலேயே தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் விருப்பம் ஆகும். முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.