“திமுகவுக்கு ஆதரவு இல்லை : ராமதாஸுக்கு நன்றி” : காடுவெட்டி மகனின் திடீர் முடிவு!
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணிக்காக பாமகவுக்கு அதிமுக சார்பில் கொடுக்கபட்ட பரிசு, வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு. இதனால் இந்த முறை சட்டமன்ற தேர்தலில் 23 சீட்டுகள் போதும் என பாமக ஒப்புகொண்டது என வெளிப்படையாகவே அறிவித்தார் அன்புமணி.
இந்த சூழலில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு தொடர்பாக பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தில் முக்கிய புள்ளியாக இருந்த காடுவெட்டி குரு மகன் கனலரசன் மீண்டும் பாமக பக்கம் சாய தொடங்கியுள்ளார். தனது தந்தை மரணத்திற்கு காரணம் ராமதாஸ் மற்றும் அன்புமணி தான் என்று வெளிப்படையாக மல்லுக்கட்டிய கனலரசன் ‘மாவீரன் மஞ்சள் படை’ என்கிற இயக்கத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். இதனால் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிய கனலரசன் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியை சந்தித்து பேசினார்.
இந்நிலையில் வன்னியர்களுக்கு 10.5 % உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இதனால் திமுகவுக்கு கொடுத்த ஆதரவை கனலரசன் திரும்ப பெற்றுள்ளார். அத்துடன் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்னியர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற உதவியதாக, பாஜக தலைவர்கள், அமைச்சர் சி.வி.சண்முகம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அழுத்தம் கொடுத்த பாமக, ஆதரித்த சீமான் அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார். ஆனால் இந்த அறிக்கையில் முதல்வர் பழனிசாமிக்கு கனலரசன் நன்றி தெரிவிக்காதது கவனிக்க வேண்டிய ஒன்று.