ஆடியோ பற்றிய மேலதிக தகவல்களை பிடிஆர்தான் சொல்ல வேண்டும் - அமைச்சர் மா.சுப்ரமணியம்
![m](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/79c5cd70ccb1add5a3541b252fe09ebd.jpg)
டெல்லியில் உள்ள பத்திரிக்கையாளர் ஒருவருடன், தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதலில் ஒரு டேப் வெளியிட்டிருந்தார். அது வெட்டி ஒட்டப்பட்டது என்று பிடிஆர் விளக்கம் அளித்திருக்கிறார். ஆனாலும் அந்த ஆடியோ உண்மை என்றே தமிழக அரசியல் களம் சூடாகிக்கிடக்கிறது. இந்த நிலையில் பிடிஆர் டேப் இரண்டாம் பாகத்தை வெளியிட்டு இருக்கிறார் அண்ணாமலை. இந்த ஆடியோவிலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் சப் -டைட்டிலுடன் குரல் பதிவு வெளியாகி இருக்கிறது.
இந்த ஆடியோவில், நான் அரசியலுக்கு வந்தது முதல் ஒரு நபர் ஒரு பதவி என்கிற கொள்கைக்கு ஆதரவு அளித்து வருகிறேன். பாஜகவிடம் எனக்கு பிடித்த விஷயமே இதுதான். கட்சியை பார்த்துக் கொள்வது மக்களை பார்த்துக் கொள்வது என்று இரண்டு பொறுப்புகளும் பிரிந்து இருக்க வேண்டும் . ஆனால் இங்கே எல்லா முடிவுகளையும் எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் எடுக்கிறார்கள்.
நிதி மேலாண்மை செய்வது எளிது . அவர்களுக்கு வரும் ஊழல் பணம் மொத்தத்தையும் அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள். முதல்வரின் மகனும் மருமகனும் தான் இங்கே கட்சி மொத்தமும். அவர்களை நிதி மேலாண்மை செய்ய சொல்லுங்கள். இதனால் கடந்த எட்டு மாதங்களாக நான் பார்த்து பிறகு ஒரு முடிவு செய்து விட்டேன். இதில் எனக்கு இருக்கும் பெரும் வசதி என்னவென்றால் இப்போது நான் விலகினால் கூட இந்த குறுகிய காலத்தில் நான் வெளியேறினால் அவர்கள் செய்தது அனைத்தும் அவர்களுக்கே திருப்பி அடிக்கும். நான் இந்த யுத்தத்தை மிக விரைவில் கைவிட்டதாக என் மனசாட்சி சொல்லாது என்று கருதுகிறேன். நான் அந்த பதவியில் இல்லாத போது அதை பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை என்று அந்த குரல் பதிவு முடிகிறது.
முதல் மற்றும் இரண்டாவது டேப் இரண்டிலுமே முதல்வர் ஸ்டாலினின் மகன் மற்றும் மருமகனை கடுமையாக விளாசி எடுத்திருக்கிறார் பிடிஆர். இவர்கள் இரண்டு பேரும்தான் கட்சியே என்றும், இவர்கள் ஒரே ஆண்டில் சேர்த்த பணம் குறித்தும் போட்டுடைத்திருக்கிறார் பிடிஆர்.
இதுகுறித்து செய்தியாளர்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டபோது, அந்த ஆடியோவில் உள்ள பதிவுகள் வெட்டி ஒட்டப்பட்டது என்று பிடிஆர் விளக்கம் அளித்திருக்கிறார் . மேலதிக தகவல்களை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறி இருக்கிறார் .
மெட்ரோ நிறுவனம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மீது அண்ணாமலை புகழ் தெரிவித்திருக்கிறாரே என்கிற கேள்விக்கு , மெட்ரோ நிறுவனம் பணம் கொடுத்ததாக சொன்ன கருத்தை அந்த நிறுவனத்தினரே மறுத்திருக்கிறார்கள். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் அண்ணாமலை என்ற அவரிடம், திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டு இருக்கிறாரே என்கிற கேள்விக்கு , தேர்தலில் வேட்புமனு தாக்கலின்போது வழக்கமாக தெரிவிக்கப்படும். அதை எடுத்து பத்திரிக்கையில் தெரிவித்திருப்பது பெரிய விஷயம் அல்ல என்கிறார்.