அரக்கோணம் இரட்டைக் கொலை : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
அரக்கோணம் அருகே தேர்தல் முன்விரோத தகராறில் அர்ஜுனன்(26), சூர்யா(26) ஆகிய இரண்டு இளைஞர்கள் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டனர். மோதலில் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், குற்றவாளிகள் 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்டனக் குரல்கள் எழுகின்றன.
இந்த நிலையில், இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அரக்கோணம் அருகே தேர்தல் தகராறில் அர்ஜுனன், சூர்யா ஆகிய இருவர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இருவரையும் இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் நேரத்தில் நடைபெற்ற மோதல் இப்போது சாதிய வன்மத்துடன் இருவர் கொலை செய்யப்பட்டு இருப்பது கண்டனத்திற்குரியது.
எத்தனை கருத்து மோதல்கள் தேர்தல் களத்தில் இருந்தாலும், தேர்தலோடு அவற்றை மறந்து விட்டு தமிழக மக்கள் அனைவரும் சகோதரர்களாக சமூக நல்லிணக்கத்துடன் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும். மாவட்ட காவல்துறை அதிகாரிகள் சட்டம் – ஒழுங்கு பணிகளை நிலைநாட்டுவதில் எவ்வித சுணக்கமும் காட்டக் கூடாது. சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.