வெந்த புண்ணில் வேல் பாய்ச்ச வேண்டாம்! அமைச்சர் சேகர்பாபு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - வானதி சீனிவாசன்
![pk](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/c8d61a02495c5db63d70c0f71e21d029.jpg)
பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் கருவறைக்குள் அத்துமீறி நுழைந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தலைமை அர்ச்சகரின் வேண்டுகோளை ஏற்று பிராயச்சித்த கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் என்பது தமிழர்களின் உணர்வோடு கலந்துவிட்ட திருக்கோயில். இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் உள்ள இந்த திருக்கோயிலில் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி அன்று மகா கும்பாபிஷேகம் நடந்து முடிந்துள்ளது. திருக்கோயில் சீரமைப்பு பணிகள் திட்டமிடப்பட்ட கட்டுமான பணிகள் முடிவதற்கு முன்பாகவே அவசர அவசரமாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதாகவும், ஆகம விதிகளை பற்றி துளியும் கவலைப்படாமல் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் அதிகாரிகளும் என்ன நினைத்தார்களோ என்ன சொன்னார்களோ அதுவே நடந்து உள்ளதாகவும் பழனி மக்களும் பக்தர்களும் மனக்குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
எந்த ஒரு திருக்கோயிலிலும் மகா கும்பாபிஷேகம் நடந்தால் 48 நாட்கள் மண்டலா அபிஷேகம் நடக்க வேண்டும் என்பது ஆகமம். தடையின்றி மண்டலபிஷேகம் நடக்க வேண்டுமானால் இடையில் பெரும் திருவிழாக்கள் வராமல் இருக்க வேண்டும். அதற்கேற்பது மகா கும்பாபிஷேக தேதியை நிச்சயத்திற்கு வேண்டும். ஆனால் மகா கும்பாபிஷேகம் நடந்து ஒரு வாரத்திற்குள் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வரும் தைப்பூசம் வருகிறது.
இது பெரும் திருவிழா என்பதால் அதற்கான ஏற்பாடுகளுக்கு குறைந்தது ஒரு வாரமாவது தேவை என்பதாலும் மண்டலபிஷேகம் என்பது வழக்கமான முறைப்படி நடத்துவது நடைமுறை சாத்தியமற்றது. இது தெரிந்தும் அவசர அவசரமாக ஏன் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது? யாருடைய உத்தரவின் பேரில் நடத்தப்பட்டது? என்பது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அதிகாரிகளும் தெளிவுபடுத்த வேண்டும் .
மகா கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள் இந்த சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர் பாபு, அவருடன் துறை அதிகாரிகளும் , ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலரும் பழனி தண்டாயுதபாணி கோயில் கருவறைக்குள் சென்று சாமி தரிசனம் செய்துள்ளது அதிர்ச்சியும், தாங்க முடியாத மன வேதனையும் அளிக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இது அப்பட்டமான ஆகம மீறல். இந்துக்களின் மத உணர்வுகளை காயப்படுத்தும் செயல். இதற்காக அமைச்சர் முருக பக்தர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இனி இது போன்ற ஆகம மீறல்கள் நடக்காது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அமைச்சரும் அதிகாரிகளும் ஆளும் கட்சி பிரமுகர்களின் ஆகம மீறினால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த தலைமை அர்ச்சகர் பிராயசித்த கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்திருக்கிறார். நடந்த தவறுக்காக முருக பக்தர்களிடம் மன்னிப்பு கேட்டு தலைமை அர்ச்சகரின் வேண்டுகோளின் படி பிராயச்சித்த கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார் .
கருவறைக்குள் யாரும் நுழையவில்லை கருவறைக்கு முன்னதாக இருக்கும் அர்த்தமண்டபத்திற்கு சென்று தான் சாமி தரிசனம் செய்தார்கள் என்று உண்மையை மறைக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முயற்சிப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும் என்கிறார்.