"வேடிக்கை பார்க்க மாட்டோம்" - மாஜிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி திடீர் வார்னிங்!
திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று, கொரோனா பரவல் குறைந்த பின்னர் மாதமொரு மாஜி அமைச்சர் வீட்டில் ரெய்டு நடத்திக் கொண்டிருக்கிறது. கரூர் விஜயபாஸ்கர், வேலுமணி, விராலிமலை விஜயபாஸ்கர், வீரமணி என V வரிசையில் ரெய்டுகள் நடந்தன. இச்சூழலில் இரு நாட்களுக்கு முன் T வரிசையில் முன்னாள் மின்சார துறை அமைச்சர் தங்கமணிக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது. இதனால் அதிமுக முகாமில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அடுத்து யாரென்று உள்ளுக்குள் பயம் ஒட்டிக் கொண்டுள்ளது. இருந்தாலும் வெளியில் கெத்தாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி தான் முன்னாள் சட்டத் துறை அமைச்சர் சிவி சண்முகம் அரசு அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசியிருந்தார். அவரைப் போல பல முன்னாள் அமைச்சர்களும் முதலமைச்சர் ஸ்டாலினையும் இந்நாள் அமைச்சர்களையும் ஒருமையில் பேசி வருகின்றனர். அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேசுகையில், "கடந்த 5 ஆண்டுகளில் கோவையில் எந்தவிதமான ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடத்த முடியாத அளவிற்கு கட்டுப்பாடுகள் விதித்தார்கள். போராட்டம் நடத்திய பலரையும் கைது செய்தனர். ஆனால் இப்போது இந்த கட்டுப்பாடுகளை மீறி போராட்டம் நடத்துகிறார்கள். இதேபோல முன்னாள் அமைச்சர்கள் நேற்று தங்கள் இஷ்டத்துக்கு பலவிதமான கருத்துளை வெளியிட்டிருக்கிறார்கள். அரசு அதிகாரிகளை, காவல் துறை அதிகாரிகளை ஒருமையில் பேசுவதை அரசு ஒருபோதும் வேடிக்கை பார்க்காது.
கடந்த கால ஆட்சியில் யாரெல்லாம் தவறு செய்திருக்கிறார்கள், ஊழல் செய்து இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று.தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தோம். அதன் பேரில்தான் தவறு செய்தவர்கள் மீது நடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் தவறு செய்தவர்கள், கொள்ளை அடித்தவர்கள் யாரும் தப்ப முடியாது” என்றார்.