"அமைச்சர் அஜய் மிஸ்ரா ஒரு கிரிமினல்; பதவி நீக்குக" - நாடாளுமன்றத்தை அதிரவைத்த எதிர்க்கட்சியினர்!
பாஜக ஆளும் ஹரியானாவில் நெல் கொள்முதலை தாமதமாக்குவதை கண்டித்து செப்டம்பர் இறுதியில் விவசாயிகள் ஆளுங்கட்சியினரின் வீடுகளை முற்றுகையிட்டு வருகின்றனர். அவர்கள் மீது போலீசார் கடும் தாக்குதலை கையாண்டதை கண்டித்து உத்தரபிரதேசத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அவ்வாறு தான் அக்டோபர் 3ஆம் தேதி லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் போராடினர்.
அப்போது போராடிய விவசாயிகள் மீது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா காரை ஏற்றியதில் இரண்டு விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதற்குப் பின் பாஜக தொண்டர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஏற்பட்ட மோதலில் பத்திரிகையாளர் ஒருவரும் மேலும் 2 விவசாயிகள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. கடும் அழுத்தத்திற்கு பின் உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சிறப்பு விசாரணைக் குழுவை உருவாக்கினார். அக்குழு ஆஷிஷ் மிஸ்ரா உள்பட 13 பேரைக் கைது செய்தது.
இக்குழு அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதன்படி இக்குழு நீதிமன்றத்தில் சமர்பித்த அறிக்கை தான் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் மகன் சதித்திட்டம் தீட்டி வேண்டுமென்றே விவசாயிகளைக் கொண்றதாக போலீஸார் குழு தெரிவித்துள்ளது. இச்செய்தி நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் எதிரொலித்துள்ளது. இதுகுறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்பிக்கள் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்திருந்தனர்.
மேலும் மக்களவையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பலர் விவசாயிகள் கொலையில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆகவே அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என குரல் எழுப்பினர். இதனால் அவையில் கடும் வாக்குவாதம் எழுந்தது. மாநிலங்களவையிலும் இதே விவகாரம் குறித்து விவாதம் நடந்தது. இதனால் ஏற்பட்ட அமளியின் காரணமாக இரு அவைகளும் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. மீண்டும் அமளி ஏற்பட்டதால் நாளை வரை அவைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.