நீட் விலக்கு கோரி திமுக தீர்மானம் : காங்கிரஸ் எம்.பிக்கள் ஆதரிப்பார்கள் என கே.எஸ்.அழகிரி தகவல்..

 
“உருப்படியான நடவடிக்கைகளை எடுங்க” மோடிக்கு கே.எஸ் அழகிரி வேண்டுகோள்

நாடாளுமன்றத்தில் திமுக கொண்டு வரும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் தீர்மானத்தை காங்கிரஸ் எம்.பிக்கள் ஆதரிப்பர்கள் என  தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி  தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு நீட் விலக்கு கோரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. கடந்த   சட்டப்பேரவைக் கூட்டத்தில் நீர் தேர்வுக்கு எதிராக திமுக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. தொடர்ந்து இதுகுறித்து பிரதமர் மோடியிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். அதேபோல் டி.ஆர். பாலு தலைமையிலான தமிழக அனைத்துக் கட்சி எம்.பிக்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சென்று வலியுறுத்தினர்.  அதன்தொடர்ச்சியாக இன்று  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக தனது எதிர்ப்பை பதிவு செய்ய இருக்கிறது.  அதற்கு காங்கிரஸ் தனது முழு ஆதரவையும் கொடுக்கும் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார்.

நீட் தேர்வு

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , “ தமிழகத்தில் உள்ள கிராமப்புற ஏழை,  எளிய , ஒடுக்கப்பட்ட,  பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை பாழடித்து மருத்துவ கனவை சிதைத்த ஒரு முறை நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுகிற வகையில்,  தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு  குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற தமிழக ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும்  எடுக்காததைக் கண்டித்து, திமுக.,  காங்கிரஸ் உள்ளிட்ட தமிழக மக்களவை உறுப்பினர்கள் இன்றைக்கு எதிர்ப்பைத் தெரிவிக்க  இருக்கிறார்கள்.  குடியரசுத் தலைவர் இன்றைக்கு உரை நிகழ்த்தும் போது,  திமுக கொண்டு வருகிற நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் தீர்மானத்தை மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரிப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடாளுமன்றம்

மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை உதாசீனப்படுத்தி வருகிற பா. ஜ.க அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற வகையில் குடியரசுத்  தலைவர் உரையை தொடங்குகின்ற போது, தமிழகத்தைச் சேர்ந்த திமுக. தலைமையிலான  காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்புக் குரலை இன்றைக்கு வெளிப்படுத்த இருக்கிறார்கள், இதை காங்கிரஸ் கட்சி ஆதரிப்பதோடு, இன்றைக்கு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.