"எத்தனை இடங்கள்.. விரைவில் பேச்சுவார்த்தை குழு" - கேஎஸ் அழகிரி சொன்ன முக்கிய தகவல்!
உள்ளாட்சி அமைப்புகளின் மிக முக்கியமான தேர்தல் இனி தான் வரப்போகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போதுமே தீயாக இருக்கும். எம்எல்ஏ எலெக்சனுக்கு கூட இவ்ளோ பெரிய எதிர்பார்ப்பு நிலவாது. தேர்தல் ஆணையம் பிப்ரவரி மத்தியில் தேர்தல் நடத்த தேர்தல் பணிகளைத் துரிதப்படுத்தி வருவதாக தகவல்கள் வட்டமடிக்கின்றன. அதன் வெள்ளோட்டமாக சில நாட்களுக்கு முன்பு அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டது. அனைத்து கட்சிகளும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த பரிந்துரைத்துள்ளன.
இதனால் கடந்த மூன்று மாதங்களாக திமுக, அதிமுக, பாமக என ஒவ்வொரு கட்சிகளும் மாநகர, நகர, பேரூராட்சி அளவில் கூட்டங்கள் நடத்தி வருகின்றன. கூட்டணிக் கட்சி பிரதிநிதிகளும் கலந்தாலோசிக்கின்றனர். உயர் மட்ட தலைவர்களுடனான கூட்டணிப் பங்கீடுக்கு முன்பாகவே அடிமட்ட அளவில் கூட்டணிக்குள் நிலவும் பிரச்சினைகளைக் களைய கூட்டம் நடத்தப்படுகிறது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக கட்சியினரிடம் விருப்பு மனுக்களைப் பெற்றது.
இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தேவையான இடங்களை கேட்டு பெற விரைவில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்தேதி அறிவித்தவுடன் திமுகவுடன் பேச்சவார்த்தை நடத்தி எங்களுக்கான இடங்களை கேட்டு பெறுவோம். அதற்கு முன்பு காங்கிரஸ் மாவட்ட தலைவர்களிடம் ஆலோசனை நடத்தி, அவர்களின் கருத்துகளையும் கேட்போம்’’ என்றார்.