கர்நாடக முதல்வர் முன்னிலையில் காங்கிரஸ் எம்.பி., பா.ஜ.க. அமைச்சர் மோதல்

 
மேடையில் மோதிய காங்கிரஸ் எம்.பி., பா.ஜ.க. அமைச்சர்

கர்நாடகாவில் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னிலையில் காங்கிரஸ் எம்.பி.யும், பா.ஜ.க. அமைச்சரும் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டத்தில்  நேற்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் பெங்களூரு நிறுவனர் நடபிரபு கெம்பேகவுடா ஆகியோரின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கர்நாடக பா.ஜ.க. அமைச்சர் அஸ்வத் நாராயண், காங்கிரஸ் எம்.பி. டி.கே. சுரேஷ் உள்பட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் கர்நாடக பா.ஜ.க. அமைச்சர் அஸ்வத் நாராயணனும், காங்கிரஸ் எம்.பி. டி.கே. சுரேஷூம்  நேருக்கு மோதலில் ஈடுபட்டனர். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் தொண்டர்கள்  பா.ஜ.க. அமைச்சர் அஸ்வத் நாராயணனை கிண்டல் செய்ததை தொடர்ந்து இந்த பிரச்சினை ஆரம்பமானது. 

அஸ்வத் நாராயணன்

இதனையடுத்து அமைச்சர் அஸ்வத் நாராயணன் கோபத்தில் மேடையில் பேசுகையில், யார் அந்த மனிதர்? உங்கள் வேலையை காட்டுங்கள். ராமநகர மக்களுக்கு வளர்ச்சியை கொண்டு வர நாங்கள் இங்கு வந்துள்ளோம். மற்றவர்களை போல் அல்ல, அடிக்கல் நாட்டுவார்கள் ஆனால் திட்டங்களை முடிக்க மாட்டார்கள் என்று பேசினார். அமைச்சரின் பேச்சு தன்னையும், காங்கிரஸ் கட்சியையும் கிண்டல் செய்வதாக உணர்ந்த  காங்கிரஸ் எம்.பி. சுரேஷ், அஸ்வத் நாராயணின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவர்கள் இருவரும் மேடையில் நேருக்கு நேர் நின்று வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். காங்கிரஸ் எம்.எல்.சி. ரவி இந்த சலசலப்பில் பங்கேற்றார் மேலும் நாராயணனிடம் இருந்து மைக்க பறிக்க முயன்றார். 

பவசராஜ் பொம்மை

அங்கு இருந்த பாதுகாவலர்கள் தலையிட்டு சமாதானப்படுத்தினர்.  காங்கிரஸ் எம்.பி. சுரேஷை பாதுகாவலர்கள் இழுத்து செல்ல வேண்டியிருந்தது. அஸ்வத் நாராயணுக்கு எதிராக மேடையில் அமர்ந்தார். இதனையடுத்து முதல்வர் பசவராஜ் பொம்மை மைக்கை எடுத்து பேசுகையில், அம்பேத்கர் மற்றும் கெம்பேகவுடாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு யாரும் தங்களின் ஈகோவை கொண்டு வர வேண்டாம். ராமநகரா மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கவே முதல்வரான நான் இங்கு வந்துள்ளேன். கட்சி பேதமின்றி அனைவரின் ஒத்துழைப்போடு வளர்ச்சி பணிகள் நடக்கும், வளர்ச்சியுடன் அரசியலை கொண்டு வர வேண்டாம் என மேடையில் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.