"செருப்பு வீச்சு; வன்முறை... அம்மா மீது பாசம் இல்லை” - கடுப்பான கடம்பூர் ராஜூ!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. எடப்பாடி, ஓபிஎஸ் தலைமையில் அதிமுகவினரும், சசிகலா, தினகரன் தலைமையில் அமமுகவினரும் அஞ்சலி செலுத்தினர். அப்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. எதிர்பாராவிதமாக எடப்பாடி, ஓபிஎஸ் காரை முற்றுகையிட்ட அமமுகவினர் செருப்பை வீசி தாக்கினர். பதற்றம் நிலவிய உடன் போலீசார் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆனால் இந்தச் சம்பவம் அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக அரசு கலவரம் ஏற்பட வேண்டும் என்பதற்காக ஒரே நேரத்தில் இரு தரப்பினருக்கும் அனுமதி வழங்கியதாகக் கூறினார். தற்போது அதிமுக புகாரின் பேரில் அமமுகவினர் 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சூழலில் இதற்குக் கண்டனம் தெரிவித்து பேசியுள்ள மற்றொரு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, "சென்னையில் ஜெயலலிதா நினைவு இடத்தில் நேற்று அநாகரீகமான வகையில் அமமுகவினர் நடந்து கொண்டனர். நினைவுநாளை துக்க நாளாக அனுசரிக்க வேண்டிய நேரத்தில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெயலலிதாவிடம் பாசம் இல்லாதவர்கள், மரியாதை இல்லாதவர்கள் தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். அதிமுகவில் இனி இரட்டை தலைமை தான் என்பதை கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதற்காக கட்சியில் சட்டத்திருத்தமும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதிமுகவை பொறுத்தவரை நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும் தான். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்தவர்கள் மீண்டும் அதிமுகவிற்கு வருவது நடக்காத காரியம். சசிகலா, தினகரன் ஆகியோர் அதிமுகவில் இணைத்துக் கொள்ளப்படுவர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்றார்.