"அவசரம்... பிஞ்சு நெஞ்சில் மத நஞ்சு; சூளும் கருப்பாடுகள்" - முதல்வருக்கு கி.வீரமணி வார்னிங்!
ஆர்எஸ்எஸ் போன்ற இந்துத்துவா அமைப்புகளால் தமிழ்நாட்டில் கால் பதித்திட முடியவில்லை. ஆகவே எப்படியாவது கால் பதித்திட வேண்டும்; கூடவே தாமரையை மலர வைக்க வேண்டும் என படாத பாடு படுகிறது. அதில் ஷாகா பயிற்சியும் அடங்கும். இதனை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலுள்ள பள்ளிகளில் ஷாகா பயிற்சி, ஆர்எஸ்எஸ் கருத்துகளை மாணவர்கள் மத்தியில் விதைக்க நினைக்கிறது. அந்த வகையில் கோவையில் விளாங்குறிச்சி பகுதியில் அமைந்திருக்கும் தர்ம சாஸ்தா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் கடந்த ஒரு வாரமாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் நடந்து வருகிறது.
இதனால் நேற்று முன்தினம் அந்த பள்ளியின் முன்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், கம்யுனிஸ்ட் அமைப்புகள் உள்பட பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் அவர்களைக் கைது செய்தனர். கடும் எதிர்ப்புகளுக்குப் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த சமயத்தில் மற்றொரு நிகழ்வைக் குறிப்பிட்டாக வேண்டும். அப்போதுதான் கோவை மாநகரக் காவல்துறையின் எண்ணமும், போக்கும் எந்த அளவில் இருக்கிறது - இரட்டை அணுகுமுறை இருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.
கடந்த 17-ஆம் தேதி கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், எழுத்தாளர் ஓவியா ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். இதனைக் கண்டிக்கும் வகையில் வாய்த் துடுக்குப் பேர்வழி (கெஞ்சினால் மிஞ்சுவதும் - மிஞ்சினால் கெஞ்சும் மன்னிப்புப் புகழ் ஆசாமி) எச்.ராஜா தலைமையில் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் வாசலில் மேடை போட்டு ஆர்ப்பாட்டத்தை காவல்துறை அனுமதியோடு நடத்தியுள்ளனர். 300 பேர் வரை ஆட்களைத் திரட்டிக் கொண்டு வந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.
தந்தை பெரியார் பற்றியும், முதலமைச்சரைப் பற்றியும் வாய்க்கு வந்தவாறு கேவலமாகவும், கீழ்த்தரமாகவும் பேசியுள்ளார். ஒரு கல்வி நிறுவனத்தின் வன்முறை ஷாகா பயிற்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினால், கைது நடவடிக்கை - ஒரு பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம் நடத்துவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினால், அதற்குச் சிவப்புக் கம்பளம் விரித்து, அனுமதி என்றால், இது என்ன இரட்டை அணுகுமுறை? பிஞ்சு உள்ள மாணவர்கள் மத்தியில், மத நஞ்சையும், வன்முறை உணர்வையும் விதைப்பது ஆபத்தானதல்லவா? இது எப்படி அனுமதிக்கப்படுகிறது?
காக்கிச் சட்டையில் காவிகள்பால் காருண்யப் பார்வையா? அணுகுமுறையா? காவல்துறையில் கருப்பாடுகள் ஊடுருவலா? தமிழ்நாட்டில் ஷாகா பயிற்சிக்கு அனுமதி கிடையாது என்று கலைஞர் மன்னார்குடி தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் பேசவில்லையா? சட்ட விரோத செயலைக் கண்டித்தவர்களைக் கைது செய்தது எந்த அடிப்படையில்? தமிழ்நாட்டில் எங்குமே ஆர்.எஸ்.எஸ். ஷாகா நடத்திட அனுமதி மறுக்கப்பட்டதே! இந்நிலையில், கோவையில் ஆர்.எஸ்.எஸ். வன்முறைப் பயிற்சிக்கு அனுமதி கொடுத்தது எப்படி?
ஷாகா பயிற்சி நடத்தி, அதில் பிஞ்சு உள்ளங்களில் மத நஞ்சை ஊட்டி - சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பை உமிழ்ந்து வளர்ப்பதும் ஏற்கத்தக்கதா? சட்டம் ஒழுங்கு பிரச்சினையை அது ஏற்படுத்தாதா? முதலமைச்சர் இதில் உரிய வகையில் கவனம் செலுத்தி, தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசர அவசியமாகும். அமைதிப்பூங்காவான தமிழ்நாட்டில் அமளியை உண்டாக்கும் வன்முறைப் பயிற்சிகளுக்கு இடம் அளிப்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். வன்முறையைத் தடுக்கவேண்டிய காவல்துறை ஆர்.எஸ்.எசுக்கு ஆலவட்டம் சுற்றுவதற்கும் ஒரு முடிவு ஏற்படுத்தப்பட வேண்டும். இது தமிழ்நாடு உத்தரப்பிரதேசமல்ல என்பது காவிகளுக்கும் நினைவிருக்கட்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.