மீண்டும் ஒரு ஜெயலலிதா மகள்! "எங்க அம்மா ஆசைய நிறைவேற்ற போறேன்"- ஜெயலட்சுமி பரபரப்பு பேட்டி

 
ஜெயலட்சுமி

வரும் எம்பி தேர்தலில் ஜெயலலிதா மகள் என்று தன்னை அடையாளப்படுத்தும் ஜெ. ஜெயலட்சுமி என்பவர் புதிய கட்சி தொடங்கியுள்ளதுடன், தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருப்பது அரசியல் களத்தில பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு கொடைக்கானலில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ஜெ.ஜெயலட்சுமி, “ஜெயலலிதாவின் உண்மையான மகள் நான்தான். சோபன் பாபு எனது தந்தை. நான் எனது தாயாரை பல காரணங்களுக்காக சந்திக்காமல் இருந்தேன். இருப்பினும் அவர் முதல்வராக இருந்தபோது இருமுறையும், மருத்துவமனையில் இருந்தபோது ஒருமுறையும் சந்தித்துள்ளேன். ஜெயலலிதா நடிகையாக இருந்தபோது அவர் வசித்த வீட்டில்தான் தற்போது நான் வசிக்கிறேன். அவருடைய டைரி, அவர் பயன்படுத்திய ஆடைகள் இன்னும் என்னிடம் உள்ளன. ஒருசில காரணங்களுக்காகவே நான் அவரது மகள் என்பதை வெளிக்காட்டாமல் இருந்தேன். 

ஜெயலலிதா மகள் என்பதற்கான டிஎன்ஏ டெஸ்ட் முடிவையும் நீதிமன்றத்தில் கொடுக்க உள்ளேன். தற்போது புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளேன். அகில இந்திய எம்ஜிஆர் முன்னேற்ற கழகம் என்பது எனது புதிய கட்சியின் பெயர். அக்கட்சியின் சின்னமாக இரட்டை ரோஜா. இரட்டை இலைக்கு, போட்டியாக இரட்டை ரோஜா சின்னம் இருக்கும். கட்சி நிர்வாகிகளை சந்திப்பதற்காக தான் கொடைக்கானல் வந்துள்ளேன். எதிர்வரும் எம்பி தேர்தலில் எனது கட்சி 39 தொகுதிகளிலும் போட்டியிடும். எந்த கட்சியுடனும் நாங்கள் கூட்டணி இல்லை. எனது அம்மா ஜெயலலிதாவின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவே புதிய கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடுகின்றேன். எனது கட்சியின் கொள்கையே எனது அம்மாவின் ஆசைதான்” என்றார்.