எங்களோடு இருந்ததால் தான் கூட்டணி கட்சிகளுக்கு லாபம்- ஜெயக்குமார்

 
jayakumar

திமுக அரசு கடந்த 8 மாதங்களில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகள் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவது மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டது, திமுக அரசு கடந்த 8 மாதங்களில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு உள்ளனர், சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு உள்ளதால் மக்கள் இந்த  தேர்தலில் எங்களுக்கு வெற்றியை தருவார்கள். கூட்டணியை பொறுத்தவரை எந்த கட்சியாக இருந்தாலும் எங்களுடன் இருந்தால் மட்டுமே லாபம், இல்லை என்றால் விலகி செல்லும் கட்சிக்கு தான் நஷ்டம்.

அதிமுகவில் இருந்து கொண்டு திமுக கட்சி அலுவலகமாக உள்ள அறிவாலயத்திற்கு செல்வது நாகரீகமற்ற செயல் அங்கு கால் வைப்பதே அவமானம் அப்படி இருக்கும் பட்சத்தில் நவநீதகிருஷ்ணன் பேசியது ஏற்றுகொள்ள முடியாது, எனவே கட்சிக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.