அப்பா மாட்டேன் என்கிறார்.. ஆங் அதெல்லாம் கிடையாது என்கிறார் பையன்.. ஜனதா தளம் (எஸ்) கட்சி நிலவரம்
கர்நாடக இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைவர் எச்.டி. தேவ கவுடா கூறியநிலையில், தற்போது நாங்கள் போட்டியிடுவோம் என்று அவரது மகன் எச்.டி. குமாரசாமி தெரிவித்தார்.
மதசார்ப்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் தேவகவுடா கடந்த சில தினங்களுக்கு முன் பேட்டி ஒன்றில், தேர்தலுக்கு எங்களிடம் பணம் இல்லை. அதனால் பெல்காவி மக்களவை தொகுதி, மாஸ்கி, சிந்தகி மற்றும் பசவ கல்யாண் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மதசார்ப்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்களை நிறுத்தாது என்று தெரிவித்தார். ஆனால், பா.ஜ.க.வுக்கு தங்களால் இயன்ற சிறிய வழியில் உதவ அநேகமாக எந்தவொரு வேட்பாளரையும் அவர்கள் களமிறக்காமல் இருக்கலாம் என்று மதசார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியை காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
இந்த சூழ்நிலையில் எச்.டி. தேவ கவுடாவின் மகனும், மதசார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான எச்.டி. குமாரசாமி எங்க இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று நேற்று தெரிவித்தார். தற்போது இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எச்.டி. குமாரசாமி இது குறித்து கூறுகையில், எங்களது வேட்பாளர்களின் மோசமான நிதிநிலை ஆய்வு செய்த பிறகு அந்த கருத்தை அவர் தெரிவித்தார். ஆனால் கர்நாடக இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த கட்சி தொண்டர்கள் எனக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
அவருடன் (தேவ கவுடா) ஆலோசனை நடத்தினேன். நாங்கள் எதிர்வரும் இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்று தெரிவித்தார். மேலும் அயோத்தி ராமர் கோயிலுக்கு நிதி திரட்டும் விவகாரம் குறித்து அவர் பேசுகையில், நிதி திரட்டும் தன்னார்வலர்கள் பணம் கொடுக்காத வீடுகளின் பெயரை எழுதுகிறார்கள் என்று குற்றம் சாட்டியதோடு, அவர்கள் ஏன் பெயர்களை குறிக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இப்போது வரை யாரும் என்னை (நிதி கேட்டு) அணுகவில்லை என்று தெரிவித்தார்.