ஜெ.தீபா கையில் வேதா நிலையம்.. அதிமுகவின் அடுத்த மூவ் - ஹைகோர்ட் கிரீன் சிக்னல்!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. சட்டம் இயற்றப்பட்டு வேதா நிலையம் அரசுடமையாக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடை அரசு செலுத்தியது. இதை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சேஷசாயி, வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை செல்லாது என உத்தரவிட்டார். 3 வாரத்துக்குள் வேதா நிலையத்தை வாரிசு தாரர்களான தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், கீழமை நீதிமன்றத்தில் அரசு செலுத்திய ரூ.67.95கோடி இழப்பீடு தொகையை அரசு திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வரி பாக்கியை வசூலிப்பதற்கான நடவடிக்கையை வருமான வரித்துறை மேற்கொள்ளலாம் என்றும் ஆணையிட்டார்.
இதையடுத்து 4 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 11ஆம் தேதி ஜெ.தீபாவால் வேதா இல்லம் திறக்கப்பட்டது. அதிமுகவின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கட்சி நிதியைப் பயன்படுத்தி வேதா இல்லத்தை வாங்கலாம் எனக் கூறப்பட்டது. அது இறுதி அஸ்திரமாக இருக்கக் கூடும். ஆனால் அதற்கு முன்னதாக சட்டப்போராட்டம் நடத்த அதிமுக முடிவு செய்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மேல் முறையீடு செய்வோம் என்றார். அதன்படி தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து அதிமுக மேல் முறையீடு செய்தது. அம்மனுவிற்கு ஹைகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.