காங்கிரஸில் ஹர்பஜன் சிங்?... "சாத்தியங்கள் அதிகம்" - சித்து போட்ட ட்வீட்டால் மிரண்டுபோன பாஜக!

 
ஹர்பஜன் சிங்

பஞ்சாப் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அங்கு ஏற்கெனவே தகித்துக் கொண்டு தான் இருந்தது. காங்கிரஸுக்குள் வழக்கமாக ஏற்படக் கூடிய கோஷ்டி தகராறு பஞ்சாப் மாநிலத்தையும் விட்டுவைக்கவில்லை. முதலமைச்சரான கேப்டன் அம்ரீந்தர் சிங்குக்கும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்துவுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது. காங்கிரஸ் தலைமை அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க படாத பாடுபட்டது. ஆனால் கைகூடவில்லை. இறுதியில் முதலமைச்சர் பதவியை அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். கட்சியிலிருந்தும் விலகிவிட்டார்.

ஹர்பஜன் சிங்

தற்போது முதலமைச்சராக்கப்பட்டிருக்கும் சரண்ஜித் சிங்குக்கும் சித்துவுக்கும் நல்ல புரிதல் இருப்பதால் அங்கு சுமுகமான நிலை எட்டப்பட்டுள்ளது. இச்சூழலில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸ் ஒருபுறம் போராடுகிறது. பாஜகவோ உட்கட்சி பூசலை சாதகமாக கருதி களத்தில் இறங்கி பம்பரமாக சுழல்கிறது. அதில் முக்கியமானது விளையாட்டு வீரர்கள், சினிமா ஸ்டார்கள் என மக்களுக்கு நன்கு பரிட்சயமானவர்களை கட்சிக்குள் இழுக்கும் வேலையை இரு தரப்பினரும் பார்க்கின்றனர். 


அந்த வகையில் நவ்ஜோத் சித்து இன்று வெளியிட்ட ஒற்றை ட்வீட் பஞ்சாப் அரசியல் களத்தையே ஆட வைத்துள்ளது. ஆம் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் தான் இணைந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், "சாத்தியக்கூறுகள் அதிகம்...” என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த வார்த்தை தான் அந்த பரபரப்புக்கு காரணம். உடனே காங்கிரஸில் அவர் இணையப் போகிறார் என செய்திகள் றெக்கை கட்டி பறக்க ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக ஹர்பஜன் அணிந்திருக்கும் பனியனில் கூட காங்கிரஸ் கட்சியைக் குறிக்கக் கூடிய நிறமிருந்ததும் சற்று சந்தேகத்தை எழுப்பியுள்ளது.


ஹர்பஜன் அரசியல் வலையில் சிக்குவது போன்ற செய்திகள் வெளியாவது இது முதன்முறையல்ல. 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின்போதே அமிர்தசரஸ் மக்களவை தொகுதியில் பாஜக அவரை களமிறக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை மறுத்துவிட்ட ஹர்பஜன், "அரசியலில் அனுபவம் வாய்ந்த பல தலைவர்கள் இருக்கும்போது நான் எதற்கு" என கேட்டு சிம்பிளாக முடித்துவிட்டார். 4 நாட்களுக்கு முன்பு கூட அவரும் யுவராஜ் சிங்கும் பாஜகவில் இணையவிருப்பதாக ஒருவர் ட்வீட் செய்திருந்தார். அதை ரீட்வீட் செய்த சிங், Fake News (போலி) என முடித்துவிட்டார். இருப்பினும் சித்துவின் ட்வீட்டை பார்க்கையில் ஹர்பஜன் காங்கிரஸில் இணைய வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது.