கூட்டணி பிளவை சரிசெய்யும் ஐவர்!

அதிமுகவுக்கும் பாஜகவுக்குமான மோதல் இப்படியே போய்க் கொண்டிருந்ததால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ரொம்பவே சாதகமாகி விடும் என்று இரு கட்சிகளிலும் இருக்கும் சீனியர்கள் பலர் கவலைப்பட்டதை அடுத்து அதிமுக பாஜக -கூட்டணி பிளவினை சரிசெய்ய வேலுமணி, தங்கமணி, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் சமாதான முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.
அதிமுகவில் இருந்த சிலர் பாஜகவில் இணைந்தார்கள். அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை உடனடியாக தமிழக பாஜகவில் இணைத்துக் கொண்டார் அண்ணாமலை. அதே நேரம் பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் சிலர் இணைந்ததும் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றார் அண்ணாமலை. இதனால் அவரும் அவரது ஆதரவாளர்களும் அதிமுக தலைமையை கடுமையாக விமர்சிக்க, பதிலுக்கு அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு உள்ளிட்டோர் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
எடப்பாடி பழனிச்சாமியின் உருவ பொம்மை உருவப் படங்களை பாஜகவினர் எரித்து ஆர்ப்பாட்டம் நடத்த பதிலுக்கு அண்ணாமலையின் உருவப்படம், உருவ பொம்மைகளை எரித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் மோதல் வலுத்து வருகிறது. இது இப்படியே போனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ரொம்ப சாதகமாகிவிடும்.
எடப்பாடி பழனிச்சாமியின் 9வது தோல்வியாக அது அமைந்து விடும் என்று பாஜக -அதிமுக கூட்டணியில் இருக்கும் சீனியர்கள் சிலர் கவலைப்பட்டு வந்திருக்கிறார்கள். இந்த நிலையில் தான் கூட்டணி பிளவை சரிசெய்ய சமாதான முயற்சியில் இறங்கி இருக்கின்றனர்.
பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், ’’கடந்த சில நாட்களாக விரும்பத்தகாத சில நிகழ்வுகள் நடந்து விட்டன. பாஜக தலைமை விரைவில் இதற்கு தீர்வு காணும்’’ என்று கூறி இருக்கிறார்.
அதிமுகவில் இருந்து கடுமையாக அதிரடி பதிலடி கொடுத்து வந்த ஜெயக்குமார், ’’பாஜகவுடன் எந்த மோதலும் இல்லை. பக்குவப்படாதவர்கள் சிலர் கருத்துகள் சொன்னார்கள். அதற்கு நாங்களும் கருத்து சொல்லி விட்டோம். மற்றபடி கூட்டணி தொடர்கிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை’’ கூறியிருக்கிறார்.
முன்னாள் அமைச்சர் கே. பி. முனுசாமி, ‘’கூட்டணியில் சிறு சிறு சலசலப்பு இருந்தாலும் தேசிய நலன் கருதி இந்த கூட்டணி எப்படி செயல்பட வேண்டும் என்பது எங்கள் கட்சி பொதுச் செயலாளர் பழனிச்சாமிக்கு தெரியும்’’ என்கிறார்.
பாஜக தலைமை இது குறித்து வெளிப்படையாக பேசாவிட்டாலும் எஸ். பி. வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜு என்று முன்னாள் அமைச்சர்களும், வானதி சீனிவாசனும் சமாதான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதே நேரம் பாஜகவினரின் அராஜக போக்கையும் கடுமையாக கண்டித்து இருக்கிறார் செல்லூர் ராஜு. பாஜகவினருக்கு சகிப்புத்தன்மையும் வாய் அடக்கமும் தேவை. வாய்க்கொழுப்போடு பேசக்கூடாது. கூட்டணி கட்சி என்பதற்காக தோளில் உட்கார்ந்து காதில் கடிப்பதை அதிமுக ஏற்காடு என்கிறார். ஒரு காலத்தில் பாஜகவினர் மதிக்க கூடியவர்களாக இருந்தார்கள். இன்று தகுதியற்றவர்களாக விஷக்கிருமிகளாக இருக்கின்றார்கள் என்று கடுமையாக விளாசி எடுத்திருக்கும் செல்லூர் ராஜு, அடக்கி வைக்க வேண்டிய அண்ணாமலையே வாய்க்கொழுப்பாக பேசுகிறார். நாம் தான் பெரிய ஆள் என நினைப்பதால் இதுபோன்ற தவறு நடக்கிறது. முதலில் அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை ’’என்று எச்சரித்து இருக்கிறார்.